| ADDED : ஜன 14, 2024 02:16 AM
ஐஸ் அவுஸ், ஆற்காடு சுரேஷ் கொலையை நேரில் பார்த்த நெருங்கிய கூட்டாளியை தீர்த்துக்கட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, ஐஸ் அவுஸ் , டாக்டர் பெசன்ட் சாலையில் நேற்று மாலை அங்குள்ள பரோட்டா கடையில் அமர்ந்திருந்த நபர் ஒருவரை , ஒரு கும்பல் விரட்டியது. அவர்களிடத்தில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.இதனால் அவர் பயந்து, அங்குள்ள ஒரு இடத்திற்கு ஓடி அறையில் ஒளிந்தார். ஆனால் அந்த கும்பல் விடாமல் விரட்டி சென்று, அந்த நபரை சரமாரியாக வெட்டிக்கொன்றது. தகவல் கிடைத்து, ஐஸ் அவுஸ் போலீசார் அங்கு வந்து, அந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரித்ததில், அவர் புளியந்தோப்பு, சிவராஜ் புரத்தை சேர்ந்த மாதவன்,52, என தெரிந்தது.இவர் மீது பேசின் பாலம் காவல் நிலயத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும், கடந்த 2023ல், ஆகஸ்ட் மாதம் அன்று பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் மாதவன் ஆகியோர் வழக்கு ஒன்றில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ,பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்கு வந்து உணவருந்தினர்.அப்போது அங்கு வந்த கும்பல் ஆற்காடு சுரேஷை வெட்டிக்கொன்றது. தடுக்க வந்த மாதவனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ஆற்காடு சுரேஷ் கொலையில் அதிமுக பிரமுகர்கள் ஜோகன் கென்னடி, சுதாகர் பிரசாத் நெல்லையைச் சேர்ந்த ரவுடிகள் உள்பட மொத்தம் 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அதில் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இந்த நிலையில், மாதவன் சிகிச்சையில் இருந்த அவர் சில நாட்களுக்கு முன் தான் வீடு திரும்பினார். ஏற்கனவே ஐஸ் அவுஸ் பகுதியில் மாதவன் இருந்ததால், டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள ஒரு பரோட்டா கடைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.நேற்று , பரோட்டா கடை உரிமையாளருக்கு உடல் நிலை சரியில்லை என மாதவன் அவரை பார்க்க வந்தார். அப்போது அதன் உரிமையாளர் அருகில் உள்ள ஒருவரை பார்க்க சென்றார். அந்த நேரத்தில் மாதவனை தீர்த்துக்கட்டியுள்ளனர்.ஆற்காடு சுரேஷ் கொலையை மாதவன் நேரில் பார்த்தவர். இதனால் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு மாதவன் ஐ விட்னஸ் ஆக இருந்துள்ளார். இதன் காரணத்தால் அவரை தீர்த்துக்கட்டினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.