| ADDED : ஜூன் 05, 2024 08:34 PM
கோவை : தேசிய அளவிலான சிலம்ப போட்டியில், கோவை மாணவர்கள் ஒன்பது பதக்கங்கள் வென்று அசத்தினர். அகில இந்திய சிலம்பம் பெடரேஷன் மற்றும் கற்பகம் பல்கலை சார்பில், 21வது ஜூனியர் சிலம்பம் போட்டி, ஈச்சனாரி கற்பகம் பல்கலையில் நடந்தது. குத்துவரிசை, அலங்கார வீச்சு, வாள் வீச்சு, சுருள் வாள் வீச்சு, ஆயுத வீச்சு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில், இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பங்கேற்ற ஏழு மாணவர்கள் ஏழு தங்கம், இரண்டு வெண்கலம் என ஒன்பது பதக்கங்கள் வென்றனர். வெற்றி பெற்ற மேரி பிரியதர்ஷினி, நிதர்சனா, நேத்ரா ஸ்ரீ, ஸ்ரீவர்சன், சுதர்சன், அபிமன்யு, பிரணவ் ஆகிய மாணவர்களை பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.