கோவை;கிராப்ட் கவுன்சில் ஆப் தமிழ்நாடு நடத்தும் கைவினை பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை, 'கிராப்ட் பஜார் 2024' என்ற பெயரில், அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில் நேற்றுதுவங்கியது.இந்திய கைவினை பொருள் கலைஞர்கள், நெசவாளர்களை ஊக்குவிக்கவும், பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைஞர்கள் பங்கேற்று, தங்களது தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இதில் துணி வகைகள், கைவினை பொருட்கள், கலைப்பொருட்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. ஓவியங்கள், குருவாயூர் முரல்கள், கோலபுரி செருப்புகள், மர ஓவியங்கள், சிப்பிகள், கடல் கொம்புகள், தோல் பொம்மைகள், புல் கூடைகள், தாமிர மணிகள், கல் பாத்திரங்கள், நாணல் மற்றும் மூங்கில் பொருட்கள், கோட்டா சேலைகள், முபாராக்புர் நெசவுகள், சேலைகள் என தனித்துவமிக்க கலைப்பொருட்களை வாங்கலாம். வரும் 23ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை, காலை, 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.