சூலுார்;கண்ணம்பாளையம் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மேற்கு மாகாளியம்மன், காமாட்சியம்மன் மற்றும் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ வேணு கோபால சுவாமி கோவில் பழமையானவை. இங்கு, திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 30ம் தேதி மாலை 5:30 மணிக்கு, முளைப்பாலிகை ஊர்வலத்துடன் துவங்கியது.தொடர்ந்து, விநாயகர் பூஜை, திருவிளக்கு பூஜை, நிலத்தேவர் பூஜை நடந்தது. மகா தீபாராதனை, திவ்ய பிரபந்த விண்ணப்பம், தாசர்கள் கவுரவிப்பு உள்ளிட்டவைகள் நடந்தன. தொடர்ந்து பரத நாட்டியம் நடந்தது.31ம் தேதி மாலை 5:30 மணிக்கு, முதல் கால ஹோமம் நடந்தது. நேற்று முன்தினம் இரண்டு கால ஹோமம், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை, நான்காம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. 8:00 மணிக்கு, ஸ்ரீமாகாளியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மனுக்கும், 9:00 மணிக்கு, ஸ்ரீ பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ வேணு கோபால சுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் மூல முர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.