குடிமங்கலம்:பொள்ளாச்சி - தாராபுரம் வழித்தடத்தில், கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கிராமப்புற மாணவர்களின் கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி, குடிமங்கலம் வழியாக தாராபுரம் செல்லும் வழித்தடத்தில், 50க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.இவ்வழித்தடத்திலுள்ள கிராமங்களைச்சேர்ந்த மாணவர்கள், தொழிற்கல்வி மற்றும் மேற்படிப்பிற்காக பொள்ளாச்சி பகுதியிலுள்ள, கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்கின்றனர்.மேலும், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இவ்வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் பயணிக்கின்றனர்.இவ்வாறு நாள்தோறும் அதிகளவு பயணிகள் செல்லும், வழித்தடத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. காலை மற்றும் மாலை நேரத்தில், 15 நிமிட இடைவெளியில், பொள்ளாச்சி - பெதப்பம்பட்டி நகர பஸ்சும், தாராபுரத்திற்கு செல்லும் 'மப்ஸல்' பஸ்களும் இவ்வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.பள்ளி நாட்களில், பெதப்பம்பட்டி, ஏ.நாகூர், குடிமங்கலம், உட்பட அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும், 'மப்ஸல்' பஸ்களை மட்டுமே நம்பியுள்ளதால், அப்பஸ்களில் பல மடங்கு கூட்டம் பயணிக்க வேண்டியுள்ளது.தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி செல்லும் பயணிகள் எண்ணிக்கையே பஸ் முழுவதும் நிரம்பியிருக்கும் நிலையில், கிராமப்புற மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.தொழிற் கல்விக்காக பொள்ளாச்சிக்கு செல்லும் மாணவர்களும், போதிய பஸ்கள் இல்லாமல் வேதனைக்குள்ளாகின்றனர்.எனவே பொள்ளாச்சி - தாராபுரம் வழித்தடத்தில், பள்ளி நாட்களில், பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.