வால்பாறை : வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.வால்பாறையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக கனமழை பெய்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் இடைவிடாமல் பெய்த கனமழையால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மரம் விழந்தும், மண் சரிந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதேபோன்று, ஆனைமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் பெய்த மழையால், நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. ஓடை, குளம், குட்டைகளில் நீர்மட்டம் உயர்ந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு நிலவரம் (மி.மீ.,):சோலையாறு - 6, வால்பாறை - 22, பரம்பிக்குளம் - 17, மேல்நீராறு - 19, கீழ்நீராறு - 8, ஆழியாறு - 42, காடம்பாறை - 49, மேல்ஆழியாறு - 42, சர்க்கார்பதி - 60, மணக்கடவு - 20, துாணக்கடவு - 27, வேட்டைக்காரன்புதுார் - 22, பெருவாரிப்பள்ளம் - 30, நவமலை - 41, பொள்ளாச்சி - 52, நெகமம் - 29 என்ற அளவில் மழை பெய்தது.