| ADDED : மார் 13, 2024 07:44 AM
காங்கேயம், கரூர் மாவட்டம் கீரனுார், மலைப்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணு, 23; தனியார் நிறுவன ஊழியர். இவரின் நண்பரான ஒன்னாரைப்பட்டியை சேர்ந்த சக்திவேல், 24; இருவரும் கே.டி.எம்., ட்டியுக் பைக்கில் நேற்று முன்தினம் நள்ளிரவில், கோவைக்கு சென்றனர்.விஷ்ணு ஓட்ட சக்திவேல் அமர்ந்து பயணித்தார். அகஸ்திலிங்கம்பாளையத்தில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரி டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் சாலையில் விழுந்தனர். இதைக்கண்டு அருகில் நின்று கொண்டிருந்த ஐயப்பன் என்பவர் இருவரையும் துாக்க முயன்றார். அப்போது வந்த ஹூண்டாய் வெர்னா கார் நிலைதடுமாறி அவர்கள் மீது மோதியது.இதில் விஷ்ணு, சக்திவேல், ஐயப்பன் மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். அப்பகுதியினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் விஷ்ணு இறந்து விட்டார். சக்திவேல், ஐயப்பன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.