உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மருத்துவமனை குப்பை எரிப்பு நோயாளிகளுக்கு மூச்சு திணறல்

மருத்துவமனை குப்பை எரிப்பு நோயாளிகளுக்கு மூச்சு திணறல்

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில், தேங்கிய குப்பையை நேற்று மருத்துவமனை பணியாளர்கள் தீயிட்டு எரித்ததால், நோயாளிகள் மூச்சு திணறினர்.ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் 2,000க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாகவும், 600க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் தங்கி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.தினந்தோறும் அரசு மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள், குப்பைகள், மரத்தின் இலைகள் என குப்பைகள் தேங்கி வருகிறது. தேங்கும் குப்பைகளை சுத்தப்படுத்தும் பணியாளர்கள், அதனை மருத்துவமனையின் ஒரு ஓரத்தில் தேக்கி வைப்பதும், அதனை தீயிட்டு அழிப்பதும் வாடிக்கையான செயலாகி விட்டது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், மக்களும் மூச்சு திணறலால் பாதிக்கப்படுகின்றனர்.நோயாளிகள் சிலர் கூறுகையில்,'' ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கிடங்கு அருகில், மருத்துவமனையின் குப்பைகள் சேமிக்கப்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறை அவை சுத்தம் செய்யப்படுவதால், மருத்துவமனையில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.''மருத்துவமனையில் வளரும் மரங்களின் இலை, தழைகளை எல்லாம் ஒன்றாக்கி, அதனை பிரேத பரிசோதனை கிடங்கின் அருகே எரிப்பதை மருத்துவமனை ஊழியர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், முதியோரும், பெண்களும், குழந்தைகளும் மூச்சு விட முடியாமல் அவதிப்படுகின்றனர். குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களை அள்ளி செல்ல, மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை