| ADDED : மே 02, 2024 12:15 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலவும் வறட்சியால் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிர்களை காப்பாற்றும்முயற்சியில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. கோமுகி, மணிமுக்தா அணைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் விவசாய பாசனத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இப்பகுதியில் கரும்பு, நெல், மக்காசோளம், மரவள்ளி, மஞ்சள், உளுந்து, மணிலா உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பருவ மழையின் போது நிலத்தடி நீர் மட்டம் வழிவகுத்து கிணற்று நீர் பாசனம் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.கடும் வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறையும் போது, கிணறுகளில் தண்ணீர் மட்டமும் குறைகிறது. அத்தருணத்தில், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திடும் பொருட்டு விவசாய நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாயிள் பயிரிட்டு வருகின்றனர். சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், மரவள்ளி, பருத்தி உட்பட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிரிடப்பட்டு வருகிறது. இந்த முறையை பயன்படுத்தி பயிர் செய்வதன் மூலம் நீர் ஆவியாகுதல் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. வேர் பகுதியில் தண்ணீர் சொட்டுவதால் பயிர் ஆரோக்கியமாகவும், அதிகளவு விளைச்சலும் கிடைக்கும். தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.இதனால் கரும்பு, மரவள்ளி, மக்காசோளம் உட்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையால் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டியுள்ளனர். இது தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளும் விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி ஊக்குவிப்பு செய்ய வேண்டும்.