காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ், 51 வார்டுகள் உள்ளன. இதில், 40 வார்டுகளில், 1978ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது.வீடுகளில் சேகரமாகும் கழிவுநீரை, நத்தப்பேட்டையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி அனுப்ப, நகர் முழுதும் நான்கு நீருந்து நிலையங்களும், ஆறு நீரேற்று நிலையங்களும் இயங்கி வருகின்றன.பாதாள சாக்கடை கழிவுநீர் திட்டத்தை, தனியார் நிறுவனம் வாயிலாக, மேலாண்மை செய்யப்படுகிறது. தனியார் நிறுவனம், பாதாள சாக்கடை திட்டத்தை பராமரிப்பு செய்ய, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 73 லட்ச ரூபாய் மாநகராட்சி நிர்வாகம் செலவிடுகிறது.ஆண்டுக்கு, 2.1 கோடி ரூபாய் செலவாகிறது. இவ்வாறு, கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டும், பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர மேற்கொள்ள முடியாமல், நகரின் பல்வேறு இடங்களில், கழிவுநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுவதை நகரவாசிகள் அன்றாடம் பார்க்கின்றனர். கழிவுநீரிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ள 40 வார்டுகளில், 15 வார்டுகளில், பாதாள சாக்கடை பிரச்னை பல ஆண்டுகளாக தீராமல் அப்படியே உள்ளது. சில வார்டுகளில், மழைநீர் வெளியேற வழியில்லாமல், பாதாள சாக்கடை குழாய்களில் விட்டுள்ளனர்.இவ்வாறு, பாதாள சாக்கடை திட்டத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ள நிலையில், தனியார் நிறுவனமும், மாநகராட்சி நிர்வாகமும், இந்த விஷயத்தில் கோட்டை விட்டதாக நகரவாசிகள் தெரிவிக்கின்றனர். பராமரிப்புக்காகவே கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டும், கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்ய முடிவதில்லை என, நகரவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், திட்ட மதிப்பீடு தயார் செய்து, நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்ப வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.