| ADDED : டிச 03, 2025 06:34 AM
காஞ்சிபுரம்: சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், அமைப்புகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 'பசுமை சாம்பியன்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பை செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் 'பசுமை சாம்பியன் விருது' வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டசபையில் 2021ல் வெளியிட்டார். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தலா 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. பசுமை சாம்பியன் விருதுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் மாதிரியான பங்களிப்பு செய்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனி நபர்கள், உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்டோர் கவுரவிக்கப்படுவர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திடக்கழிவு மேலாண்மை, நீர் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் உள்ளோர் விண்ணப்பிக்கலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு தேவையான படிவம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் www.tnpcb.gov.inபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, ஒரகடத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை அணுகலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 2026 ஜனவரி 20க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.