| ADDED : மார் 23, 2024 01:55 AM
நாகர்கோவில்:''எங்கள் அலைபேசியை மட்டுமின்றி எங்கள் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தால் கூட ஒன்றும் இருக்காது,'' என, நாகர்கோவிலில் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.இந்தியா கூட்டணி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது: இந்தியாவிற்கு நல்ல ஒரு செய்தியை சொல்லும் விதம் கன்னியாகுமரி லோக்சபாவில் இண்டியா கூட்டணி வெற்றி அமையும். இம்மாவட்டத்தில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது. அதை சிறப்பாக சீரமைத்து உள்ளோம். நான்கு வழிச்சாலை பணியை பா.ஜ., நிறுத்தியிருந்தது. அதை மீண்டும் தொடங்கி உள்ளோம். தி.மு.க., கடந்த தேர்தலில் அறிவித்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதா என்று அரசியல் கட்சியினர் தான் கேட்கிறார்கள். மக்கள் கேட்கவில்லை. ஏனென்றால் வாக்குறுதியில் சொன்ன, சொல்லாத திட்டங்களை செய்துள்ளோம்.டாஸ்மாக்கை மூடுவோம் என்று தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் எங்கும் செல்லவே இல்லை. படிப்படியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்று தான் கூறியிருக்கிறோம். மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது போன்ற வழிவகைகளை செய்வோம் என்றும் கூறியிருந்தோம். அதன்படி பல இடங்களில் கவுன்சிலிங் செண்டர் அமைத்துள்ளோம்.கோவையில் கூட பா.ஜ.-,வால் வெற்றி பெற முடியாது. தி.மு.க.,வின் பழைய வெற்றிக்கூட்டணி எந்த சேதாரமும் இல்லாமல் அப்படியே வந்துள்ளது. அனைத்து கட்சிகளையும் பா.ஜ., மிரட்டி வைத்துள்ளது. இரு மாதங்களில் இரு மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனக்கு பினாமி லாரிகள் ஓடுவதாக முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிரூபித்தால் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். அதற்காக எங்குவேண்டுமானாலும் கையெழுத்திட தயாராக இருக்கிறேன்.அலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுகிறதா என கேட்கிறீர்கள். நாங்கள் எந்த ராணுவ ரகசியமும் பேசுவது இல்லை. தேர்தல் விஷயங்களையும் பேசவில்லை. அமலாக்கத்துறை, வருமானவரித்துறைகளுக்கு நாங்கள் தவறான ஐடியா கொடுக்கவில்லை. எங்கள் தலைவர் ஒளிவுமறைவற்ற நிர்வாகம் நடத்துகிறார் என்றார்.