கரூர்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை-ஈரோடு பிரிவு சாலையில், ரவுண்டனா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-கோவை மற்றும் ஈரோடு சாலை திருகாம்புலியூர் முனியப்பன் கோவில் அருகே பிரிந்து செல்கிறது. இந்த வழியாக நாள்தோறும் லாரிகள், பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகிறது. இதனால், முனியப்பன் கோவில் பகுதியில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சில நாட்களில் மட்டும் அந்த பகுதியில், போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். அந்த பகுதியில் விபத்து ஏற்படும் பட்சத்தில், கோவை மற்றும் ஈரோடு சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதனால், முனியப்பன் கோவில் பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலை துறை நிர்வாகம் பொதுமக்கள் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை.இதுகுறித்து, திருக்காம்புலியூர் மக்கள் கூறியதாவது: கோவை சாலை ஆண்டாங்கோவில் பகுதியில் இரண்டு பள்ளிகளும், திருகாம்புலியூர் பகுதியில் ஒரு பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், விபத்து நடக்கும் பிரிவு சாலை பகுதியில் நடந்தும், சைக்கிளிலும் செல்கின்றனர்.இதை தவிர, அந்த பகுதியில் வசித்து வரும் மக்களும் செல்கின்றனர். அப்போது, கோவை மற்றும் ஈரோடு சாலையில் வரும் வாகனங்கள் செல்லாமல், விபத்தில் சிக்கி கொள்கின்றன. இதனால், முனியப்பன் கோவில் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.