உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆளுங்கட்சி கவுன்சிலர்களால் ஓசூர் மேயருக்கும் வருது சிக்கல்

ஆளுங்கட்சி கவுன்சிலர்களால் ஓசூர் மேயருக்கும் வருது சிக்கல்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கூட்டம் தி.மு.க.,வை சேர்ந்த மேயர் சத்யா தலைமையில் நடந்தது. மொத்தமுள்ள, 45 கவுன்சிலர்களில், கூட்டத்தில், அ.தி.மு.க., -- 13, பா.ஜ., - காங்., தலா ஒன்று, 2 சுயேச்சைகள், தி.மு.க., கவுன்சிலர்கள், 5 பேர் என, 22 பேர் மட்டும் பங்கேற்றனர். தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின், 30 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சி பணிகள் அடங்கிய அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி, மேயர் கூட்டத்தை முடித்தார்.இதற்கிடையே, கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள், மேயர் சத்யாவுக்கு எதிராக, தி.மு.க.,வை சேர்ந்த துணை மேயர் ஆனந்தய்யா தலைமையில், பாகலுார் சாலையிலுள்ள ஹோட்டலில் போட்டி கூட்டம் நடத்தினர். இதில், தி.மு.க., கவுன்சிலர்கள், 14 பேர், பா.ம.க., கவுன்சிலர் ஒருவர், மூன்று சுயேச்சைகள் என மொத்தம், 18 பேர் பங்கேற்றனர். மேயர் சத்யா தலைமையில் நடக்கும் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். புதிய கமிஷனர் பதவியேற்ற பின்னர் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றி, அதை மனுவாக எழுதி, 18 கவுன்சிலர்களும் கையெழுத்திட்டு, மேயர் சத்யாவிடம் கொடுத்தனர்.அதை பெற்ற மேயர் அதிர்ச்சியடைந்து, கவுன்சிலர்களிடம், தன் அறையில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேச்சு நடத்தினார். பின், மனுவை பரிசீலிப்பதாக கூறி, கவுன்சிலர்களை அனுப்பி வைத்தார்.நெல்லை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாநகராட்சிகளை தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சியிலும் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் கொடி பிடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை