| ADDED : ஜன 14, 2024 12:20 PM
பென்னாகரம்: பென்னாகரத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சுடர் பவுன்டேஷன், மற்றும் பாலின வள மையம் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா மற்றும் கலாசார விளையாட்டு போட்டிகள், இளம்வயது திருமண தடுப்பு விழிப்புணர்வு உள்ளிட்டவை, பென்னாகரம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலக வளாகத்தில் நடந்தது.மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாளர் பிரதீப் வரவேற்றார். ஊராட்சி செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். சுடர் பவுன்டேஷன் மற்றும் சசி கல்வி அறக்கட்டளையின் செயலாளர் இன்னிசை அரங்கநாதன் தலைமை வகித்தார். பச்சமுத்து மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வமணி பேசினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட வளப்பயிற்றுனர் பெருமாள், இளவயது திருமண தடுப்பு கருத்துரை வழங்கினார். அதேபோல பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவமனையின் முன்பு மண்பானையில் பொங்கல் வைத்து, கரும்பு அச்சு வெல்லம் படைத்து, சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில், கும்மியாட்டம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் டாக்டர்.பாலமுருகன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.