உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  32 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி; இரட்டை பணிச்சுமையால் தலைமையாசிரியர்கள் தவிப்பு

 32 டி.இ.ஓ., பணியிடங்கள் காலி; இரட்டை பணிச்சுமையால் தலைமையாசிரியர்கள் தவிப்பு

மதுரை: தமிழகத்தில் 32 மாவட்டக் கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பணியிடங்கள் காலியாக உள்ளதால் கூடுதல் பொறுப்பு வகிக்கும் தலைமையாசிரியர்கள் பணிச்சுமையால் தவிக்கின்றனர். பள்ளிகளில் கற்றல் கற்பித்தலை கண்காணிப்பது, நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்வதில் சி.இ.ஓ.,க்களை அடுத்து டி.இ.ஓ.,க்கள் பணி முக்கியமானது. பல மாதங்களாக 32 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்குவது, பள்ளி அங்கீகாரம், பள்ளி ஆய்வுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக 50 சதவீதம் சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக இருந்தன. எதிர்க்கட்சிகள் விமர்சித்ததால் அவை நிரப்பப்பட்டன. அப்போது தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி, இடைநிலைக் கல்வி டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதில் ஏற்பட்ட காலியிடங்களால் டி.இ.ஓ.,க்களின் காலியிடம் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இப்பணியிடத்தில் தலைமையாசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: காலிப் பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்படுவதில்லை. அமைச்சருக்கும் தெரிவதில்லை. அரசியல் கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்த பின்னர் தான் அமைச்சருக்கு தெரிகிறது. டி.இ.ஓ.,க்கள் காலியாக உள்ள மாவட்டங்களில் நிர்வாக பணிகள் முடங்கியுள்ளன. நலத்திட்டங்கள் வழங்குவதிலும் போதிய கண்காணிப்பு இல்லை. டி.இ.ஓ., கூடுதல் பொறுப்பு வகிக்கும் தலைமையாசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி, டி.இ.ஓ., பணி இரண்டையும் ஒரே நேரத்தில் பணிச்சுமையில் தவிக்கின்றனர். இதன் விளைவு பொதுத் தேர்வு முடிவுகளில் எதிரொலிக்கும். விரைவில் இப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ