| ADDED : ஜன 27, 2024 04:36 AM
திருப்பரங்குன்றம், : ''லோக்சபா தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற முதல்வர் ஸ்டாலின் தயாராகிறார்'' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.திருநகர் ஹார்விபட்டியில் அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அவர் பேசியதாவது: ஒரு தி.மு.க., அமைச்சர் இன்றுவரை சிறையில் உள்ளார். இதைவிட அசிங்கம் வேறெதுவும் இல்லை. மதுரையில் நடந்த அ.தி.மு.க., மாநாட்டுக்குப் போட்டியாக சேலத்தில் தி.மு.க., மாநாடு நடத்தப்பட்டது. அ.தி.மு.க., மாநாட்டிற்கு மக்கள் அலைகடலென வந்தனர். சேலம் தி.மு.க., கூட்டத்தில் குத்தாட்டம் நடந்தது.தி.மு.க., எம்.எல்.ஏ., மகன் வீட்டில் பணிபுரிந்த சிறுமியை சித்ரவதை செய்த விஷயத்தில், அ.தி.மு.க., சார்பில் போராட்டம் அறிவித்த பின்பே போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுகின்றனர். போலீசார் மெத்தனமாக உள்ளனர்.நடிகர்களில் கட்சி துவங்கி வெற்றி பெற்றது எம்.ஜி.ஆர்., மட்டுமே. நடிகர் விஜய் நாட்டு நலப்பணிகள் செய்தால் வரவேற்போம். லோக்சபா தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றிபெற முதல்வர் ஸ்டாலின் தயாராகி வருகிறார். அவர் ஜனநாயகத்தை நம்புகிறவர் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.