| ADDED : மார் 08, 2024 01:21 AM
மதுரை: தமிழகத்தில் வாயில் வடை சுடுவதில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.மதுரை முத்துப்பட்டியில் அங்கன்வாடி கட்டடத்துக்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:ஸ்டேட் பேங்க் தேர்தல் பத்திர விபரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது போல தெரிகிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் பயப்படுவது காங்., தி.மு.க., தான். அ.தி.மு.க.,வுக்கு பயமில்லை.தி.மு.க., கூட்டணியில் எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மக்கள் அவர்களை ஏற்கமாட்டார்கள். 'அ.தி.மு.க., கூட்டணிக்கு வாங்க' என நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. பா.ஜ.,வையே வேண்டாம் என்கிறோம். வாயிலேயே வடை சுடுவதில் இந்திய அளவில் பிரதமர் மோடி முதலிடம் வகிக்கிறார் என்றால் தமிழகத்தில் ஸ்டாலின் தான் முதலிடத்தில் உள்ளார்.'நீங்கள் நலமா' என புதிதாக பெயர் வைத்து ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுகிறார். பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அ.தி.மு.க., தலைவர்களின் புகழை பாடுகிறார். அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடும் மக்களை மோடி ஏமாற்ற நினைக்கிறார்.கஜினி முகமது போல மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு (படையெடுத்து) வந்தாலும் மக்கள் பா.ஜ.,வை ஏற்க மாட்டார்கள். அரசியலில் மதம் கலக்கக் கூடாது. பா.ஜ., ஒரு மதத்தை முன்னெடுத்து செல்கிறது. அதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். ராமர் கோயில் கட்டியதை குறை சொல்லவில்லை. அதை மக்கள் மத்தியில் பிரசாரமாக எடுத்து செல்லக் கூடாது.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது என்பது ஒரு அரசியல் நாடகமாக மாறிவிட்டது. தமிழகத்திற்கு இத்தனை முறை வந்த பிரதமர் எய்ம்ஸ் கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை என்றார்.