உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் உரிமையாளருக்கு நிதி நிறுவனம்; ரூ.17,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

டூவீலர் உரிமையாளருக்கு நிதி நிறுவனம்; ரூ.17,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

நாமக்கல்: 'டூவீலர் உரிமையாளருக்கு, நிதி நிறுவனம், 17,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.நாமக்கல், கணேசபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 55. இவர், 2023 டிச.,ல், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், நிதி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். அதில், 'சென்னையில் உள்ள, தனியார் நிதி நிறுவனத்திடம், 71,393 ரூபாய், 2022 நவ.,ல், கடன் பெற்று, 'டி.வி.எஸ்., ஸ்கூட்டி பெப் பிளஸ்' மொபட் வாங்கினேன். கடன் வழங்கிய நிறுவனம், எந்த அறிவிப்பும் இன்றி, 2023 மே மாதம், மொபட்டை பறிமுதல் செய்து விற்றுவிட்டனர். வாகனத்தை விற்ற பின், கடன் நிலுவை தொகையை செலுத்துமாறு, நிதி நிறுவனம் நிர்ப்பந்தம் செய்து வருகிறது. சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டது சேவை குறைபாடு. அதனால், நிதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர். அதில், வழக்கு தாக்கல் செய்தவர், கடன் ஒப்பந்தப்படி மாத தவணை தொகையை செலுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், நிதி நிறுவனத்தினர் சட்ட விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை கைப்பற்றி நியாயமான விலைக்கு விற்பனை செய்யவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் வாகனத்தை விற்றதற்கு, 10,254 ரூபாய், சேவை குறைபாட்டிற்கு, 4,668 ரூபாய், வழக்கு செலவு தொகை, 2,000 ரூபாய் என, மொத்தம், 16,922 ரூபாயை, நான்கு வாரத்திற்குள், வழக்கு தாக்கல் செய்த வாகன உரிமையாளருக்கு நிதி நிறுவனம் வழங்க வேண்டும்.மேலும், இந்த தொகையிலிருந்து நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை பிடித்தம் செய்து, வழக்கு தாக்கல் செய்தவர், 'நிதி நிறுவனத்துக்கு எவ்வித தொகையும் செலுத்த வேண்டியது இல்லை' என, சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை