| ADDED : ஜூலை 06, 2024 01:50 AM
அன்னுார்;'வாழையில் ஊடு பயிர் செய்தால், ஒரு எக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்,' என தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்தார். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தேர்வு செய்யப்பட்டுள்ள குப்பையபாளையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கிராம முன்னேற்ற குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது.தொழில் நுட்ப மேலாளர் லோகநாயகி வரவேற்றார். துணை வேளாளர் அலுவலர் ராஜன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் சாந்தி அருண்குமார் முன்னிலை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் கோமதி பேசுகையில், ''வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள், ஊடுபயிராக பொரியல் தட்டை பயிரிட்டால், ஒரு எக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். தக்காளி, மிளகாய், கத்தரி ஆகிய நாற்றுக்கள் ஒரு எக்டேருக்கு 12,500 வரை வழங்கப்படும்,'' என்றார்.வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் நிவேதா பேசுகையில், ''வேளாண் இயந்திரங்கள், சோலார் பம்ப், சோலார் உலர்த்தி ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள்வாடகைக்கு வழங்கப்படுகிறது,'' என்றார்.இளநிலை ஆராய்ச்சியாளர் துரைசாமி பேசுகையில், ''விவசாயிகள் தவறாமல் மண் பரிசோதனை செய்வதன் மூலம் தேவையான உரம் மட்டும் இடலாம். எந்த பயிர் பயிரிடலாம் என தெரிந்து கொள்ளலாம். செலவு குறையும்,'' என்றார். உதவி வேளாண் அலுவலர் வினோத்குமார், பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் கார்த்தி, வேளாண் அலுவலர் கோகிலா தேவி ஆகியோர் பேசினர். உதவி தொழில் நுட்ப மேலாளர் முனுசாமி மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.