கூடலுார்:கூடலுார் தொரப்பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி ஓட்டம் காட்டிய யானையை வனத்துறையினர், 7 மணி நேரம் போராடி அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். கூடலுார் தொரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டு, விவசாயி பயிர்களை சேதப்படுத்திவரும் காட்டு யானைகளை, முதுமலையிலிருந்து அழைத்துவரப்பட்ட இரண்டு 'கும்கி' யானைகள் உதவியுடன், விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், தொரப்பள்ளி குணில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை ஒன்று முகாமிட்டு ஊரை சுற்றி வந்தது. தகவலின் பேரில், முதுமலை வனச்சகர் விஜய் மற்றும் வன ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், 'கும்கி' யானைகள் உதவியுடன், காட்டு யானை விரட்டும் பணிகள் ஈடுபட்டனர். காட்டு யானை வன ஊழியர்களை திருப்பி விரட்டியதுடன், தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் முகாமிட்டது. மக்கள் அவசிய தேவைக்கு கூட வெளியே வர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர்.தொடர்ந்து, வன ஊழியர்கள், 7 மணி நேரம் போராடி, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். வன ஊழியர்கள், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.மக்கள் கூறுகையில், 'இரவு நேரத்தில் இப்பகுதிக்கு வந்து சென்ற காட்டு யானைகள், தற்போது பகல் நேரத்திலேயே வந்து செல்வதன் மூலம், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை, 'கும்கி' யானைகள் உதவியுடன் கண்காணித்து விரட்டு பணியில் ஈடுபட்டு வருகிறோம். யானைகள் நடமாட்டம் இருக்கும்போது மக்கள் வெளியே வருவதை தவிர்த்து, யானைகளை விரட்ட வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.