| ADDED : ஜன 10, 2024 12:49 AM
ஊட்டி:நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியை சேர்ந்த ராஜபிரகாஷ் என்பவர் மின்கம்பத்தை மாற்றி அமைக்க, கோத்தகிரி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாசை அணுகினார். இதற்கு, ஜெயபிரகாஷ், 55, என்பவர், 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜபிரகாஷ், ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.பின், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன தடவிய, 4,000 ரூபாயை ராஜபிரகாசிடம் கொடுத்து அனுப்பினர். கடந்த, 2014ல் லஞ்ச பணத்தை ஜெயபிரகாசிடம், ராஜபிரகாஷ் கொடுத்த போது மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு, ஊட்டியில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்தது; நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில், ஜெயபிரகாஷுக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.பின், கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீல் ரேணுகா கார்த்திகேயன் ஆஜரானார்.