| ADDED : ஆக 01, 2011 11:52 PM
கூடலூர் : 'பொது வினியோக பொருட்களை இரவு நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு
எடுத்து செல்ல கூடாது,' என கூடலூர் ஆர்.டி.ஓ., எச்சரிக்கை
செய்துள்ளார்.கூடலூர் கோட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் ஆர்.டி.ஓ.,
அலுவலகத்தில் நடந்தது. அனைத்து ரேஷன் கடைகளும் குறித்த நேரத்தில் திறப்பது;
தரமான அரிசி வழங்குவது; அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைப்பது;
தணிக்கையில் விடுப்பட்ட ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்து மாற்று ரேஷன் கார்டு
வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைள் நுகர்வோர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.
இதில்,ஆர்.டி.ஓ., தனசேகரன் பேசுகையில், ''அனைவருக்கும் தரமான அரிசி
வழங்கப்படுகிறது. வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு வரும் விண்ணப்பங்கள் பதிவு
செய்து அதன் அடிப்படையில் தீர்வு காணப்படும். சிவில் சப்ளை
குடோன்களிலிருந்து இரவு நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை எடுத்து
செல்லக் கூடாது. 5 கி.மீ., வரை காஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய கட்டணம்
ஏதும் வசூல் செய்யக் கூடாது,'' என்றார்.கூட்டத்தில், கூடலூர் வட்ட வழங்கல்
அலுவலர்கள் இன்னாச்சிமுத்து (கூடலூர்), பிரபாகர் (பந்தலூர்), கூடலூர்
நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சுப்ரமணி, பந்தலூர் வட்டார நுகர்வோர்
சங்க தலைவர் விஜயசிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.