| ADDED : ஜன 27, 2024 03:58 PM
சேலம் : சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த மீனவர் கண்ணன், 54. இவரது மகன் ஆப்ரிக்காவில் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு, 3 ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளதால், அவர் ஆன்லைன் மூலம் வேறு நாடுகளில் வேலை தேடினார். இந்நிலையில் அவரது சமூக வலைதளங்களுக்கு, கனடா நாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை இருப்பதாக, கடந்த டிச., 10ல் தகவல் வந்தது. அதில் இருந்த எண்களில் தொடர்பு கொண்டு பேசியபோது வேலைக்கு ஒப்பந்த பத்திரம், விசா, பாஸ்போர்ட் அனைத்தும் வீட்டுக்கே நேரடியாக வழங்குவதாக, மர்ம நபர் உறுதி அளித்தார். அதற்கு, 15 லட்சம் ரூபாய் கட்டணமாக வங்கியில் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.அதை உண்மை என நம்பி, கண்ணன், மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில், 12 தவணைகளாக, 14.34 லட்சம் ரூபாய் செலுத்தினார். பணம் சென்றடைந்த நிலையில் மர்ம நபரின் தொடர்பு எண்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கண்ணன் அளித்த புகார்படி சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.