| ADDED : மே 03, 2024 05:44 AM
மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் மாம்பழ விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளான மானாமதுரை, மாங்குளம், பீக்குளம், வேதியரேந்தல்,கலியாந்துார், பூவந்தி உள்ளிட்ட பகுதிகளில் 50 ஏக்கரில் மாமரங்கள் உள்ளன.வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டும் கிடைக்கும் விளைச்சலை வைத்து ஆண்டு முழுவதும் மா மரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.வருடம் தோறும் மார்ச்சில் துவங்கி ஜூன் வரை மாம்பழம் அறுவடை இருக்கும்.வருட கடைசி மாதமான டிசம்பரில் பெய்யும் மழை மற்றும் அடுத்த வருட துவக்கமான ஜனவரியில் உள்ள பனி பொழிவால் மாங்காய் விளைச்சல் அதிகரிக்கும்.ஆனால் இந்தாண்டு ஜனவரியில் மழை, தொடர்ந்து கடும் வெயில் காரணமாக பூக்கள் உதிர்ந்த காரணத்தினால் காய்கள் விளைச்சல் இல்லாமல் இந்த வருடம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.மாம்பழ விவசாயிகள் கூறுகையில், கல்லாமை, காசா லட்டு, ராஜபாளையம் சப்போட்டா, பாலாமணி, இமாம் பசந்த் உள்ளிட்ட மாம்பழ வகைகளை விளைவித்து வருகிறோம்.5 ஏக்கருக்கு ஒரு வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை செலவு செய்து வருகிற நிலையில் விளைச்சல் நன்றாக இருந்தால் கூடுதலாக ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும்.ஆனால் இந்த வருடம் போதுமான விளைச்சல் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் கவலைக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் காய்ப்பறிப்பு, வண்டி வாடகை இவற்றிற்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு கூட விளைச்சல் இல்லாமல் போனதால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.