| ADDED : ஆக 01, 2024 10:39 PM
சிவகங்கை : திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு தேவஸ்தான இடத்தை கேட்டு வாங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் உள்ள 103 தெருக்களில் 30 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். மதுரை --- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருப்புவனம் வழியாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ராமேஸ்வரம் செல்கின்றனர். இது தவிர காசிக்கு ஈடான புண்ணிய ஸ்தலம் திருப்புவனம். இங்கு தர்ப்பணம் கொடுக்க தினமும் நுாற்றுக்கணக்கில் வருகின்றனர். இதனால், நாளுக்கு நாள் மதுரை -- ராமேஸ்வரம் ரோட்டில் வாகன நெரிசல் அதிகரித்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இச்சிறப்பு பெற்ற திருப்புவனம் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் வசதியில்லை. அனைத்து பஸ்களும் ரோட்டிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால், ஏற்படும் பிரச்னையை தவிர்க்க சந்தை திடல் அருகே தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தை பெற்று, அங்கு பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கான முயற்சியில் பேரூராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. ஆலோசனை கூட்டம்
தேவஸ்தான இடத்தை பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக கேட்டு பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன், தமிழரசி எம்.எல்.ஏ., திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், செயல் அலுவலர் தனுஷ்கோடி, சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது: திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக முயற்சித்து வருகிறோம். இதற்கான நிதி உள்ளது. இடத்தை கேட்டு பெறுவதற்காக பேசி வருகிறோம், என்றார்.