| ADDED : ஜூலை 25, 2024 11:39 PM
திருப்புவனம் : மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கனரக வாகனங்கள் பல விதிகளை மீறி சென்டர் மீடியனை கடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி வழியாக ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, இளையான்குடி உள்ளிட்டபல்வேறு நகரங்களுக்கு நான்கு வழிச்சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. நான்கு வழிச்சாலையின் நடுவே சென்டர் மீடியன்அமைக்கப்பட்டு இடவசதி உள்ள இடங்களில் அரளிச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. நான்கு வழிச்சாலையின் குறிப்பிட்ட துாரங்களுக்கு இடையே வாகனங்கள், பாதசாரிகள் கடக்க சந்திப்பு அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கனரக வாகனங்கள், டூவீலர்கள் உள்ளிட்டவை விதிகளை மீறி சென்டர் மீடியனை கடப்பதால் விபத்து ஏற்படுகிறது. திடீரென நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் இருந்து வெளிப்படும் வாகனங்களால் முறையாக வாகனங்களை இயக்கிச் செல்பவர்கள் அதிர்ச்சியடைந்து தடுமாறுகின்றனர். சென்டர் மீடியனில் உயரம் வெகுவாக குறைந்திருப்பதால் லாரிகள், டிராக்டர்கள், கலவை இயந்திரங்கள் என பலவும் சென்டர் மீடியனை கடந்து எதிர் திசைக்கு வருகின்றனர். நான்கு வழிச்சாலையில் அதிவேகத்தில் வரும் வாகன ஓட்டுனர்கள் திடீரென குறுக்கே வரும் வாகனங்களை கண்டு அதிர்ச்சியடைந்து விபத்துகளில் சிக்குகின்றனர். மணலுாரில் சென்டர் மீடியனை கடந்து திடீரென டிராக்டர் எதிர் திசையில் நுழைந்ததால் அரசு டவுன் பஸ் ஓட்டுனர் அதிர்ச்சியடைந்து வாகனத்தை நிறுத்தினார். இதுபோன்று அடிக்கடி சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. மழவராயனேந்தல் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் நிரந்தரமாகவே விதிகளை மீறி கடக்க பாதை அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே நான்குவழிச்சாலையில் சென்டர் மீடியன் உயரத்தை அதிகரிக்க வேண்டும்.