| ADDED : டிச 28, 2025 05:28 AM
கீழடி: கீழடி அருங்காட்சியகத்திற்கு நேற்று துாத்துக்குடி லோக்சபா தொகுதி உறுப்பினரும் தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான கனிமொழி தனது தொகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களை அழைத்து வந்து சுற்றி காட்டியதுடன் அவர்களுடன் அருங்காட்சியகத்தில் புகைப்படம் எடுத்து கொண்டார். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்தும் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார். அவருடன் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி உள்ளிட்டோரும் வந்தனர். கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்த கனி மொழியை கீழடி அருங்காட்சியக இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் வரவேற்றனர். பின்னர் அவர் பேசும்போது: நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா என தனது எக்ஸ் தளத்தில் பழனிசாமி சவால் குறித்த கேள்விக்கு, முதல்வருக்கு தற்போது அதற்கு எல்லாம் நேரமில்லை எனக் கூறி நழுவிவிட்டார். 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு படிப்படியாக குறைக்க திட்டமிட்டு முதல் கட்டமாக பெயரை மாற்றியுள்ளது. பல இடங்களில் 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. மத்திய அரசே முழு ஊதியத்தையும் வழங்கி வந்த நிலையில் தற்போது மத்திய அரசு 60 சதவிகிதம், மாநில அரசு 40 சதவிகிதம் என திருத்தம் கொண்டு வந்துள்ளது, என்றார்.