| ADDED : நவ 26, 2025 03:27 AM
கம்பம்: பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம் அரசு மருத்துவமனைகளில் ரூ.26 கோடியில் கட்டி திறக்கப்படாமல் உள்ள விபத்து அவசர சிகிச்சை பிரிவு, பிரசவமேம்பாட்டு பிரிவு புதிய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள இருவழிச் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. பைபாஸ் சாலைகள் பயன்பாட்டிற்கு வந்த பின், விபத்துகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க அவசர சிகிச்சை பிரிவு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. மாவட்டத்தில் போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் என எந்த அரசு மருத்துவமனையிலும் இந்த வசதி இல்லை. கடந்த 2023 ஏப்ரலில் பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.12 கோடியிலும், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடி என மொத்தம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு ஏற்படுத்த அரசு அனுமதி வழங்கியது. இதற்கான கட்டுமான பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கி நிறைவடைந்துள்ளது. கம்பம் அரசு மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்கம் சார்பில் ரூ.10 கோடியில் பிரசவ மேம்பாட்டு பிரிவு கட்டுமான பணி நிறைவு செய்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கட்டடங்களும் என்ன நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அது நிறைவேறாமல் உள்ளது. இதற்கு காரணம் ஒவ்வொரு பிரிவிற்கும் தேவைப்படும் பணியிடங்களான டாக்டர்கள், நர்சுகள், இதர பணியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து இணை இயக்குநர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்த போது, மருத்துவமனைகளில் பணி முடித்த புதிய கட்டடங்களை பொதுப்பணித் துறை கட்டுமான பிரிவு முறைப்படி நலப்பணிகள் இயக்குநரகத்திடம் ஒப்படைக்கவில்லை. மேலும் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து டாக்டர்கள், நர்சுகள் எத்தனை பேர் தேவை என்ற பட்டியல் இயக்குநரகத்திற்கு அனுப்பி ஒப்புதல் பெற உள்ளதாகவும், விரைவில் அனுமதி கிடைக்கும் என்கின்றனர்.