| ADDED : ஜூன் 05, 2024 01:14 AM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த மனோபுரம் பகுதியில், ஆரணி ஆற்றின் கரையில் மதகு ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து கால்வாய்களில் வெளியேற்றப்படும் மழைநீர், இந்த மதகு வழியாக ஆரணி ஆற்றிற்கு செல்லும்.இதனால், மழைக்காலங்களில் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கி வீணாவது தடுக்கப்பட்டு வந்தது. அதேபோல், மழைக்காலம் முடிந்து, ஆற்றில் தேங்கியிருக்கும் தண்ணீரை, இதே மதகு வழியாக வெளியேற்றி விவசாயத்திற்கு தேவையானபோது பயன்படுத்தப்பட்டது.தற்போது, இந்த மதகு சேதமடைந்து உள்ளது. மதகு சுவர்களில் சிமென்ட் பூச்சுகள் கொட்டியும், விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மழைநீர் செல்லும் வழியில் மரம், செடிகள் வளர்ந்து புதராக மாறி உள்ளது. தொடர் பராமரிப்பு இல்லாததால், மதகு சேதமடைந்ததாக விவசாயிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.இதனால், விவசாய நிலங்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீரை வெளியேற்ற முடியாமலும், தேவையானபோது, ஆற்றுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.எனவே, பொதுப்பணித் துறையினர், இந்த மதகை முழுதுமாக அகற்றிவிட்டு, திறந்து மூடும் அமைப்பில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.