| ADDED : ஜூன் 29, 2024 02:19 AM
திருத்தணி:திருத்தணி நகரில் உள்ள பெரிய ஏரி, 209 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் திருத்தணி நகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரிப்பாசனம் மூலம், 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் பயிரிடுகின்றனர். இந்நிலையில் திருத்தணி நீர்வளத்துறையினர் ஏரியை முறையாக பராமரிக்காததால் நீர்வரத்து கால்வாய்கள் புதைந்தும், ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் மற்றும் வீடுகள் கட்டி வருகின்றனர். இதனால் பருவ மழையின் போது ஏரிக்கு நீர்வரத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மேலும் ஏரியில் தண்ணீர் நிரம்பினால் சில விஷகிருமிகளால் ஏரியின் மதகை சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றுகின்றனர். நாளுக்கு நாள் ஏரியின் பரப்பளவு சுருங்கி வருகிறது. காரணம் ஏரியில் வீடுகள் கட்டி வருவது அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையீட்டு ஏரியில் ஆக்கிரமிப்புகள் தடுத்து நிறுத்தியும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
வருவாய் துறை அலட்சியம்
இது குறித்து திருத்தணி நீர்வளத்துறையின் உதவி பொறியாளர் காதம்பரி கூறியதாவது: திருத்தணி ஏரியில், தற்போது, ஒன்றரை ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்புகள் உள்ளது என கண்டுபிடித்து உள்ளோம். இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கும், மேலும் ஏரியில் எவ்வளவு ஆக்கிரமிப்பு உள்ளது என கண்டுபிடித்தோம். ஏரியை அளப்பதற்காக கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக திருத்தணி தாசில்தார் மற்றும் சர்வேயர்களிடம் ஏரியின் பரப்பளவுஅளந்து காண்பிக்க வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளேன். இதுவரை மூன்று முறை கடிதம் எழுதியும் சர்வேயர்கள் வந்து அளந்து காண்பிக்கவில்லை. ஆக்கிரமிப்பு எவ்வளவு பகுதி உள்ளது என கண்டறியப்பட்டால் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.