கல்விக்கண் திறக்கும் நுாலகம் தினமும் திறக்க கோரிக்கை
திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை கிளை நுாலகத்தில் தினசரி நாளிதழ்கள், கதை புத்தகங்கள் மற்றும் மாணவர்கள் போட்டி தேர்வு எழுதுவதற்கு உதவும் வகையில் அறிவு சார்ந்த புத்தகங்கள் என, 1,000த்திற்கும் மேற்பட்ட நுால்கள் உள்ளன.இந்த நுாலகத்திற்கு பிரதி வாரம் வெள்ளிக்கிழமை மற்றும் முக்கிய அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. மீதமுள்ள நேரத்தில் தினமும் காலை முதல் மாலை வரை திறந்திருக்கும். இந்நிலையில், சில மாதங்களாக நுாலகர் சரியான முறையில் நுாலகத்திற்கு வருவதில்லை. இதனால், வாசகர்கள் மற்றும் மாணவர்கள் நுால்களை எடுத்து படிக்க முடிவதில்லை.எனவே, இனிவரும் நாட்களில் விடுமுறை நாள் தவிர மீதமுள்ள நேரத்தில் நுாலகம் திறந்து புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.தசரதன்,வட்டார வளர்ச்சி அலுவலர் - ஓய்வு,செருக்கனுார், திருத்தணி. எலும்புக்கூடாக மாறிய மின்கம்பத்தால் அச்சம்
திருவாலங்காடு ஒன்றியம்சின்னம்மாபேட்டை ஊராட்சியில், தக்கோலம் --- கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில் செல்லியம்மன் கோவில் செல்லும் சாலை அருகே டிரான்ஸ்பார்மர் அமைந்து உள்ளது.கடந்த ஆறு மாதங்களாக, இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் இரண்டு மின்கம்பமும் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.இந்நிலையில் நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த டிரான்ஸ்பார்மர், காற்று பலமாக வீசினால் விழுமோ என்ற அச்சத்தில் பகுதிவாசிகள் உள்ளனர். எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கு.சிவகுருநாதன்,சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு. சேதமடைந்த சிமென்ட் சாலை சீரமைப்பு பணி எப்போது?
திருத்தணி நகராட்சி, இரண்டாவது ரயில்வே கேட் அருகே உள்ள ஜோதிசாமி தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இச்சாலை வழியாக வெளியூர் வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நகராட்சி அலுவலகம், பஜார் மற்றும் காய்கறி மார்கெட்டிற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன், கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளுக்காக சிமென்ட் சாலை சேதப்படுத்தி குடிநீர் குழாய்கள் அமைத்தனர்.ஆனால், பணிகள் முடிந்து ஓராண்டாகியும், இதுவரை சிமென்ட் சாலையை சீரமைக்கவில்லை. சாலை முழுதும் பள்ளங்களாக மாறியதால், வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக சிமென்ட் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ஜோதி, திருத்தணி.