| ADDED : ஜூலை 31, 2024 12:58 AM
திருப்பூர்;புதிய ரக நிலக்கடலையை வேளாண்மை துறையினர் ஊக்குவிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூர் வட்டாரங்களில் மானாவாரி பயிராக, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.மத்திய அரசின் தேசிய விதை கழகம், 'ஜி.ஜெ.ஜி -32' என்ற புதிய ரக நிலக்கடலை ரகம் அறிமுகம் செய்துள்ளது. இதை வேளாண் துறையினர் திருப்பூர் மாவட்ட விவசாயிகளிடத்திலும் அறிமுகம் செய்துள்ளனர்.தேசிய உணவு பாதுகாப்பு திட்ட திருப்பூர் மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது;உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றாலும், எண்ணெய் வித்து உற்பத்தியில் பின்தங்கியுள்ளோம். எனவே, வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. எண்ணெய் வித்து முக்கியப் பயிரான நிலக்கடலையில், விளைச்சலை பெருக்க வேளாண்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.தேசிய விதை கழகம், புதிய ரக விதைகளை உற்பத்தி செய்து, வேளாண் துறைக்கும், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது.ஜி.ஜெ.ஜி., என்ற புதிய ரக விதையின் வாயிலாக விளைவிக்கப்படும் நிலக்கடலை செடியில், 90 காய்கள் பிடிக்கும். திருப்பூர், அவிநாசி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இந்த புதிய ரக நிலக்கடலை விதை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 110 நாளில் விளைச்சல் தரும் இந்த ரகத்தில் எண்ணெய் பிழிதிறன், 54 சதவீதம் வரை உள்ளது.நம் மாநிலத்தில் சாகுபடி செய்ய ஏற்ற ரகமாக, தேசிய விதை கழகம் அறிமுகம் செய்துள்ளது. தேவைப்படும் விவசாயிகள் பெருமாநல்லுார் மற்றும் அவிநாசி வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். விதைப்பு முறை குறித்த ஆலோசனைகளை வழங்கவும் தயாராக உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.