திருப்பூர்;'பிளஸ் 1, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் பாட தேர்வு எளிதாக இருந்தது' என, மாணவர்கள் திருப்தி தெரிவித்தனர்.பிளஸ் 1 பொது தேர்வில் நேற்று, கம்ப்யூட்டர் அறிவியல் தேர்வு நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில், 7,924 மாணவர்கள் தேர்வெழுத தகுதி பெற்றிருந்த நிலையில், 50 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். 7,874 பேர் தேர்வெழுதினர்.கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வெழுத, 7,614 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 7,547 பேர் தேர்வெழுதினர்; 67 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தனித் தேர்வர்களாக, கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை, 12 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வை 5 பேரும் எழுதினர்.தேர்வு எளிது தான்!யோகேஷ்வரன்: கம்ப்யூட்டர் அறிவியல் தேர்வு எளிதாக இருந்தது. ஒன்று, இரண்டு மதிப்பெண் கேள்வி என அனைத்தும் புத்தகத்தில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த கேள்விகள் வந்திருந்தன; வினாத்தாளை படித்ததும், அனைத்தும் தெரிந்த பதில்களாக இருந்ததால், பதட்டம் ஏற்படவில்லை.ஹர்ஷத்: கலைப்பாட பிரிவில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடம் எளிமையாக இருக்கும் என்று தான், அந்த பாடப்பிரிவை தேர்வு செய்தேன். அத்துடன், எந்தவொரு வேலை வாய்ப்பு பெறுவதாக இருந்தாலும், கம்ப்யூட்டர் அறிவு அவசியம் என்பதும், கம்ப்யூட்டர் பாடத்தை தேர்வு செய்ய ஒரு காரணம். தேர்வு எளிதாக இருந்தது.சஞ்சய்: தற்போதைய சூழலில், கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அதனடிப்படையில் கம்ப்யூட்டர் பாடத்தை கற்றுத் தேறும் ஆவலில், இந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தேன்; தேர்வில், ஆசிரியர்கள் சொல்லிக்கொடுத்த கேள்விகள் வந்திருந்தன; 'புக் பேக்' மற்றும் புத்தகத்தின் உட்புறமிருந்தும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.ஆதித்தன்: கம்ப்யூட்டர் அறிவியல் தேர்வு எளிதாக இருந்தது; படித்த கேள்விகள் வந்திருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்கள் கடினமானதாக இல்லை. பிளஸ் 2 பொது தே்ரவை, எளிதாக சந்திக்கும் தைரியத்தை இந்த தேர்வு ஏற்படுத்தியது; எந்தெந்த பாடங்களை எப்படி படிக்க வேண்டும் என்பதையும் உணர முடிந்தது.
வகுப்பு தேர்வே அச்சாரம்!
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் தேர்வு குறித்து பழனியம்மாள் பள்ளி ஆசிரியை அகிலா கூறியதாவது:பிளஸ் 1 வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் தேர்வுகள், எளிதாக இருந்தது. தற்போது, கம்ப்யூட்டர் பாடப்பிரிவில் கவனம் செலுத்தி படித்தால், பிளஸ் 2வில் அப்பாடத்தை படிப்பது எளிதாகும். பிளஸ் 2 வகுப்புக்கான அடிப்படை, பிளஸ் 1 வகுப்பு தான் என்ற நிலையில், மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டும்.முழு ஆண்டு தேர்வின் மீது மட்டும் கவனம் வைக்காமல், காலாண்டு, அரையாண்டு மற்றும் வகுப்பளவில் நடத்தப்படும் வகுப்பு தேர்வுகளில் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் பெற்றால், பொது தேர்வு எதிர்கொள்வது எளிதாக இருக்கும். இந்த பயிற்று முறையை அனனத்து பாடங்களிலும் பின்பற்றுவது சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார்.