உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலை அருகே ரேஷன்கடை முற்றுகை: பேச்சுவார்த்தையில் சமரசம்

உடுமலை அருகே ரேஷன்கடை முற்றுகை: பேச்சுவார்த்தையில் சமரசம்

உடுமலை : அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்க கோரியும், பொதுமக்களை தரக்குறைவாக நடத்திய உதவியாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் பல மணி நேரம் முற்றுகை போராட்டம் நடத்தினர். குடிமங்கலம் ஒன்றியம் சனுப்பட்டி ரேஷன் கடையில், சனுப்பட்டி, வல்லக்குண்டாபுரம் போன்ற கிராமங்களை சேர்ந்த 731 ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். நேற்று காலை ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வினியோகிப்பதாக நேற்றுமுன்தினம் இரவு கிராமத்தில் தண்டோரா போடப்பட்டது. இதனையடுத்து, நேற்று அதிகாலையிலேயே ரேஷன் கடைக்கு சென்ற மக்கள் வரிசையாக எண்ணெய் 'டின்'களை அடுக்கி வைத்துள்ளனர். காலை 8.00 மணிக்கு கடைக்கு வந்த ரேஷன் கடை உதவியாளர் மக்கள் அடுக்கி வைத்திருந்த 'டின்'களை வெளியில் தூக்கி வீசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் புகார் தெரிவித்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த வட்ட வழங்கல் அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்துவதாக உறுதியளித்ததும் சாலை மறியல் முயற்சியை கைவிட்ட மக்கள் கடையை முற்றுகையிட்டனர். கடைக்கு ஆய்வுக்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரி ஜெயசீலனை பொதுமக்கள் முற்றுகையிட்டு சராமரியாக புகார்களை தெரிவித்தனர். ஒவ்வொரு மாதமும் மண்ணெண்ணெய் குறைவாகவே வினியோகிக்கப்படுகிறது. பாமாயில் மற்றும் பருப்பு போன்ற பொருட்கள் பலருக்கு கிடைப்பதில்லை. பற்றாக்குறை வினியோகத்திற்கு உரிய காரணம் கேட்டால் ரேஷன் கடை பணியாளர்கள் தரக்குறைவாக பதில் அளிக்கின்றனர். பற்றாக்குறை வினியோகத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்', இவ்வாறு தெரிவித்தனர். வட்ட வழங்கல் அதிகாரியின் சமரச பேச்சுவார்த்தையில் திருப்தியடையாத மக்கள் ரேஷன் கடை முற்றுகை போராட்டத்தை கைவிடவில்லை. காலை 8.30 மணிக்கு துவங்கிய முற்றுகை போராட்டம் மதியம் 12.30 மணி வரை தொடர்ந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு குடிமை பொருள் தாசில்தார் தாஸ் சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தகுதியுள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மண்ணெண்ணெய் வினியோகிக்கப்படும். ஒதுக்கீடு குறைவாக இருக்கும் நிலையில் டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனை பெறும் மக்கள் அடுத்த மாதம் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளலாம்' பாமாயில், பருப்பு போன்றவை தட்டுப்பாட்டில்லாமல் வினியோகிக்கப்படும்', இவ்வாறு தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் சமரசமடைந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை