உடுமலை: மானாவாரி நிலங்களில், சிறு தானிய பயிர் சாகுபடியை ஊக்குவிக்க, வேளாண்துறை சார்பில், நேரடி கொள்முதல் முறையை அமல்படுத்த விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில், விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் பி.ஏ.பி., பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பி.ஏ.பி., அமராவதி மற்றும் கிணற்றுப்பாசனம் இல்லாத விளைநிலங்களில், மானாவாரியாக சிறுதானிய பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.பருவமழைகளை அடிப்படையாகக்கொண்டு, மானாவாரியாக சோளம், தட்டை பயறு, மொச்சை, உளுந்து, கொண்டைக்கடலை, கொத்தமல்லி உட்பட சாகுபடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சாகுபடியில், விளைச்சல் குறைவு, போதிய விலை கிடைக்காதது உட்பட காரணங்களால், விவசாயிகள் பாதித்து வருகின்றனர்.இதைத்தவிர்க்கும் வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு, முன், ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், உளுந்து நேரடி கொள்முதல் செய்யப்பட்டது. அதற்கான ஆதார விலையும் நிர்ணயிக்கப்பட்டது. இதில், ஏராளமான விவசாயிகள், பயன்பெற்றனர்.இதே போல், கொத்தமல்லி, கொண்டைக்கடலை உட்பட தானியங்கள் கொள்முதலையும், வேளாண்துறை வாயிலாக அரசு மேற்கொண்டால், மானாவாரி விவசாயிகள் அதிகளவு பயன்பெறுவார்கள்.அடுத்த மானாவாரி சீசனில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம், இதற்கான நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள்உள்ளனர். தமிழக அரசும் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.