| ADDED : ஆக 05, 2011 12:45 AM
திருப்பூர் : சோதனை அடிப்படையில் செயல்பட, அருள்புரம் சுத்திகரிப்பு
நிலையம் திறக்கப்பட்டுள்ளன. சில சாய ஆலைகள் நேற்று உற்பத்தியை
துவங்கின.ஐகோர்ட் நடவடிக்கைக்கு உள்ளாகி, திருப்பூரில் கடந்த ஆறு மாதமாக
சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. சாய ஆலைகளை மீண்டும் இயக்க தமிழக அரசு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரண்டு புதிய தொழில் நுட்பங்களை
பயன்படுத்தி, சாயக்கழிவை சுத்திகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவும்,
அதற்கு மாநில அரசு 200 கோடி ரூபாய் வட்டியில்லாத கடன் வழங்கவும் முன்
வந்துள்ளது.அதனடிப்படையில் 'பிரெய்ன் சொல்யூஷன்' என்ற தொழில்நுட்பம் மூலம்
முதல்கட்டமாக அருள்புரம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை
அடிப்படையில் சாயக்கழிவை சுத்திகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.இதற்கு மூன்று
மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு பின்,
வெளியேறும் 20 சதவீத கழிவுநீரையும் முழுமையாக சுத்திகரிக்க வாய்ப்புள்ளது.
80 சதவீத கழிவுநீர் சுத்தமான தண்ணீராக மாற்றி, மீண்டும் சாய ஆலைகளுக்கே
திருப்பி அனுப்பப்படும். அதில், 'ரிஜக்ட்' ஆகும் 20 சதவீத கழிவை, இதன்
மூலம் சுத்திகரித்து, மெக்னீசியம், கால்சியம், கார்பனேட் போன்றவை
நீக்கப்படும். உப்புத்தன்மை மட்டுமே மீதமுள்ள கழிவுநீர் சாயமிடும் பணிக்காக
மீண்டும் சாய ஆலைகளுக்கே அனுப்பப்படும். இதற்கென அனைத்து சாய ஆலைகளுக்கும்
தனியாக குழாய்கள் பதிக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது.அருள்புரம் பொது
சுத்திகரிப்பு நிலையம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதற்கு உட்பட்ட 15
சாய ஆலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படையினர் ஆய்வு
செய்தனர். அனுமதிக்கப்பட்ட 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
என்பதால், மீதமுள்ள இயந் திரங்களை 'சீல்' வைத்தனர்.சோதனை அடிப்படையில்
நேற்று சில சாய ஆலைகள் இயங்கத் துவங்கின. அனைத்து ஆலைகளிலும் 'சீல்'
வைத்து, குறிப்பிட்ட இயந்திரங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள்
குறிப்பெடுத்தனர். இவ்விவரங்கள் அனைத்தும் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பல
மாதங்களுக்கு பின், சாய ஆலைகள் இயங்கத் துவங்கியதாலும், மூன்றில் ஒரு பங்கு
மட்டுமே உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஆலைகளுக்கு முழு அளவிலான
தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. 200 பேருக்கு மேல் பணியாற்றக் கூடிய
ஆலையில் 30 பேருக்கு மட்டுமே வேலை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், உடனடியாக
பனியன் நிறு வனங்களும் ஆர்டர் வழங்காத நிலை இருப்பதால், முழு அளவிலான
பணிகள் துவங்க மேலும் இரண்டொரு நாளாகும். நேற்று முதல் இயங்கத் துவங்கிய
ஆலைகளிலும், ஆரம்பகட்ட பணிகள் முடிந்து, பிற்பகலுக்கு மேல் துணிகளை
சாயமிடும் பணியை துவக்கின.