| ADDED : டிச 08, 2025 06:32 AM
விழுப்புரம்: விழுப்புரம், செஞ்சியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 60 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் நகராட்சி திடலில் இந்து முன்னணி சார்பில், திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற தீர்ப்பை மீறி முருக பக்தர்களை அவமதித்த தமிழக அரசை கண்டித்து அறப்போராட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், நேற்று மாலை 3:30 மணிக்கு விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதையடுத்து, 4:00 மணிக்கு மேல் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சதீஷ் அப்பு தலைமையில் பொது செயலாளர் சுரேஷ் துரைராஜ், செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜி, ரஞ்சித், பா.ஜ., மாவட்ட தலைவர் விநாயகம் உட்பட நிர்வாகிகள் பலர் திருச்சி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்தனர். இந்த நிர்வாகிகள் 30 பேரையும், போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். அதே போல், செஞ்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற செயலாளர் லோகநாதன் தலைமையிலான இந்து முன்னணி நிர்வாகிகள் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.