| ADDED : ஜூலை 16, 2024 11:12 PM
விருதுநகர், : விருதுநகரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 13 பேரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த நிறுவன உரிமையாளர் சேதுவிற்கு 50, 27 ஆண்டுகளும், ஊழியர் கற்பகத்திற்கு 45, 26 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.பி.கவிதா தீர்ப்பளித்தார்.விருதுநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 35. இவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித்தரும் நிறுவனத்தை நடத்திய ஏஜன்ட் சேது வேலை வாங்கித்தருவதாக 2016 ல் ரூ. 60 ஆயிரம் பெற்றார். ஆனால் வெளிநாட்டில் வேலை பெற்று கொடுக்கவில்லை. இதே போல 13 பேரிடம் ரூ. 10 லட்சத்திற்கும் மேல் பெற்று சேது, ஊழியர் கற்பகம் தலைமறைவாகினர். இவர்களை விருதுநகர் மேற்கு போலீசார் 2018ல் கைது செய்தனர்.இவ்வழக்கு முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் சேது, கற்பகத்திற்கு தலா 26 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 52 ஆயிரம் அபராதம், குடியேற்ற சட்டம் 1983 கீழ் சேதுவிற்கு கூடுதலாக ஓராண்டு சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எஸ்.பி., கவிதா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் உதவி வழக்கறிஞர் குமார் ஆஜரானார்.