உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைப்பதில் காலதாமதம்

முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைப்பதில் காலதாமதம்

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் துணை மின் நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, பல மாதங்களாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் நிதி ஒதுக்கி, பணிகளை துவக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.காரியாபட்டி முடுக்கன்குளம் பகுதியில் அடிக்கடி மின் தடை, குறைந்த அழுத்த மின்சாரம் சப்ளை செய்யப்படுவதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். மின்சாரம் தட்டுப்பாடால் விவசாயத்தை தொடர முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். காரியாபட்டி துணை மின் நிலையத்திலிருந்து முடுக்கன்குளம், எசலிமடை வரை 20 கி.மீ., சுற்றளவுக்கு மின் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.காரியாபட்டி பகுதியில் அதிக அளவிலான குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் உருவாகி வருவதால் சீரான மின்சப்ளை வழங்க முடியவில்லை. முடுக்கன்குளம் பகுதியல் மின் சப்ளை செய்வதில் பிரச்னை இருந்து வருகிறது. குறைந்த அழுத்தம் மின்சாரத்தால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் பிரச்னை ஏற்பட்டால் ஒட்டுமொத்தமாக மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. பழுது ஏற்பட்டாலும் முற்றிலும் மின்தடை செய்ய வேண்டியிருக்கிறது.இதனை கருத்தில் கொண்டு முடுக்கன்குளத்தில் 110 கேவி துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தனியார் நிறுவனம் சார்பாக 2 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. அதன் பிறகு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. பல மாதங்களாகியும் நிதி ஒதுக்காமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், சீரான மின்சாரம் வழங்குவதோடு, பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் நிறுவனங்கள் வர வாய்ப்புள்ளது. விவசாயம் செழிக்கும். ஒருவேளை மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால், இங்கிருந்து உடனடியாக மின் சப்ளை செய்ய முடியும். அவ்வாறு இருக்க, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது. மின் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண நிதி ஒதுக்கி, விரைந்து பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தீர்வு

மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்கள் வர வேண்டும் என்றால் அப்பகுதியில் தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும். காரியாபட்டியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தட்டுப்பாடான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது பிரச்னைக்கு தீர்வு காண முடுக்கன்குளத்தில் 110 கேவி துணை மின் நிலையம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். விரைவாக நிதி ஒதுக்கி பணிகளை துவக்க நடவடிக்கை எடுப்பதே உரிய தீர்வாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை