UPDATED : ஜூலை 04, 2024 06:18 AM | ADDED : ஜூலை 04, 2024 02:29 AM
ராமநாதபுரம்:வைகை அணையை துார்வாராததால் ஒரு டி.எம்.சி., நீர் சேமிக்க முடியாமல் வீணடிக்கப்படுவதாக வைகை பூர்வீக பாசன விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.தேனி மாவட்டம் வருஷநாடு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை ஆறாக உருவாகி வைகை அணையை வந்தடைகிறது. முல்லை பெரியாறு பகுதியில் இருந்து வரும் நீர், வராக நதி, கொட்டகுடி ஆறுகளிலிருந்து வரும் நீரும் வைகை அணையில் சேமிக்கப்படுகிறது.வைகை அணை மொத்த உயரம் 71 அடி. ஆனால் 20 அடிக்கு சேறும் சகதியும் நிரம்பியுள்ளது. அணையின் முழுக்கொள்ளளவு 6.14 டி.எம்.சி. சகதியால் 20 அடி போக 5 டி.எம்.சி., மட்டுமே தேக்க முடிகிறது. எனவே அணையை துார் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆதிமூலம், வைகை பூர்வீக பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்: 2010ல் பார்லிமென்ட் நிலைக்குழு வந்த போது விவசாயிகள் தரப்பில் துார் வார கோரிக்கை விடுக்க பட்டது. அப்போது ஜப்பான் நிதியுதவியுடன் ரூ.100 கோடியில் நவீன தொழில் நுட்பத்தில் துார் வாரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் என்ன காரணமோ அது நிறைவேறவில்லை. அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது மணல் போக்கிகளை திறந்து விட்டால் ஓரளவு சேறும், சகதியும் வெளியேறும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை செய்ய முன் வருவதில்லை. எனவே வைகை அணையை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.வைகை அணை மூலம் பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக தினமும் 2 கோடி லிட்டருக்கும் மேல் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. வைகை பூர்வீக பாசனப்பகுதிகளில் 374 கண்மாய்கள் மூலம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.இது தவிர்த்து முல்லைப் பெரியாறு பாசனப்பகுதி நீரும் வைகையில் சேமிக்கப்பட்டு அதிலிருந்து வழங்கப்படுகிறது. வைகை அணையை துார் வாருவதற்கான நடவடிக்கையை தமிழக அரசும், பொதுப்பணித்துறையும் எடுக்க வேண்டும் என்றார்.