சென்னை: நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுவப்படும் கொடி கம்பங்களை உடனடியாக அகற்றும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ராமலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'நெடுஞ்சாலைகளில் கொடிக்கம்பங்கள் நடுவது போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 'நெடுஞ்சாலை இடங்களை ஆக்கிரமித்து, அரசியல் மேடையாக கட்சிகள் பயன்படுத்துகின்றன.சென்னை கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில், மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையில் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்' என, கூறப்பட்டது. இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசின் தலைமை செயலரை பிரதிவாதியாக சேர்த்து விளக்கம் அளிக்க, முதல் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. சட்டவிரோதகொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவுகள் பிறப்பித்தும், அவற்றை அகற்றாதது நீதிமன்ற அவமதிப்பு எனவும் முதல் பெஞ்ச் எச்சரித்தது. வழக்கு மீண்டும் முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், 45 இடங்களில், 59 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், 40 இடங்களில் அகற்றப்பட வேண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து வைக்கப்படும் கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், போலீசாருக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தை சேர்த்த முதல் பெஞ்ச், அரசியல் கட்சிகளை சேர்க்க, மனுதாரருக்கு அனுமதி வழங்கியது. விசாரணையை, வரும் 25க்கு தள்ளி வைத்தது.