சென்னை:ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர், திருச்சி முகாமில் அடைக்கப்பட்டனர். உடல் நலமின்றி இருக்கும் தாயை கவனிக்க, தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் சாந்தன் மனுத் தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், அவர் மரணமடைந்து விட்டார்,'' என்றார். தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''மாஜிஸ்திரேட் விசாரணை முடிந்து விட்டது. பிரேத பரிசோதனை, உடலை பதப்படுத்தும் நடைமுறையும் முடிந்து விட்டது. மத்திய அரசும், துாதரகமும் அனுமதி அளித்த பின், உடலை இலங்கைக்கு அனுப்ப முடியும்,'' என்றார்.மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், ''சில ஆவணங்களை சேகரிக்க வேண்டியதுள்ளது. விரைவில் அவற்றை சேகரிக்க முடியும். மத்திய அரசு, உடலை எடுத்துச் செல்ல தேவையான உத்தரவு பிறப்பிக்கும்,'' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மத்திய அரசிடம், தேவையான ஆவணங்கள் வழங்கப்படுவதை, மாநில அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சென்னையில் உள்ள இலங்கை துாதரகத்திடம் அனுமதி பெறுவதற்கான முயற்சிகளை, மாநில அரசு எடுக்க வேண்டும். அதற்கான அனுமதி சான்றிதழ் பெற்று, மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதை பெற்ற பின், இலங்கைக்கு உடலை எடுத்துச் செல்வதற்கு, தேவையான அனுமதியை, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விரைந்து முடிய, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஐ.பி.எஸ்., அதிகாரியை, நோடல் அதிகாரிகளாக தமிழக அரசு நியமிக்க வேண்டும். இந்த உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை, மத்திய, மாநில அரசு அதிகாரிகள், வரும் 4ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.