உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம்: சத்யபிரதா சாஹூ

அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாம்: சத்யபிரதா சாஹூ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை; ஆனால் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஏப்.,19ல் ஒரேகட்டமாக லோக்சபா தேர்தல் நடந்துமுடிந்தது. ஆனாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் விலக்கப்படவில்லை. அதேநேரத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கும் இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு தினமான ஜூன் 1ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே வெயிலின் தாக்கத்தை போக்க அரசியல் கட்சிகள் சார்பில் பல இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து, பொதுமக்களுக்கு இலவசமாக தாகத்தை தணித்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் இருக்கும்போது, அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்கலாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. தண்ணீர் பந்தல் திறக்க சில அரசியல் கட்சிகள் அனுமதி கோரியிருந்தன. இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ''அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறக்க ஆட்சேபனை இல்லை. தண்ணீர் பந்தல் அமைப்பதன் வாயிலாக எந்தவொரு அரசியல் ரீதியான செயல்பாட்டிலும் ஈடுபடக் கூடாது; தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும். தண்ணீர் பந்தல் சரியான முறையில் செயல்படுகிறதா என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ