சவாலாகும் குறைப்பிரசவ குழந்தைகளின் ஆரோக்கியம்!
உலக குறைப்பிரசவக் குழந்தைகள் தினம் இருபது ஆண்டுகளுக்கு முன், நான் அமெரிக்காவில் இருந்து வந்து பயிற்சியை ஆரம்பித்த போது, என்.ஐ.சி.யூ., எனப்படும் பச்சிளங் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு பிரபலமாகவில்லை.கடந்த 2018ல், இண்டியன் பவுண்டேஷன் பார் பிரீ மெச்சூர் பேபிஸ்' என்ற அமைப்பு சார்பில், 634 பெண்களிடம் ஆய்வு செய்தோம். அப்போதும் இதே நிலை தான் இருந்தது. ஆய்வில் பங்கு பெற்ற பலரும், என்.ஐ.சி.யூ.,என்ற ஒன்று இருப்பதே தெரியாது என்று சொன்னார்கள். இவர்களில் 76 சதவீதம் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பே ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, கர்ப்பம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதும் தெரியவில்லை. கர்ப்ப காலத்தில் சத்தாக சாப்பிட்டு, உடல் நலத்தை கவனித்தால் போதும் என்று நினைக்கின்றனர்.குறைப்பிரசவம் என்ற ஒன்று நடக்கும் என்பதே 54 சதவீதம் பெண்கள் கேள்விப்பட்டதில்லை. குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்தால், ஒரு மணி நேரத்திற்குள் என்.ஐ.சி.யூ.,வில் சேர்க்க வேண்டும். இப்படி ஒன்று இருப்பதே தெரியாததால், என்னதான் பிரசவம் பார்த்த டாக்டர் போராடி புரிய வைத்தாலும், சம்மதம் பெற்று குழந்தையை என்.ஐ.சி.யூ., விற்கு மாற்ற 24 மணி நேரம் ஆகிறது. இதனால் 50 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே 'கோல்டன் ஹவர்' எனப்படும் முதல் ஒரு மணி நேத்திற்குள் சிகிச்சை கிடைக்கிறது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்களிடம் செய்த ஆய்விலும், என்.ஐ.சி.யூ., இருப்பதோ, குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதோ தெரியாது என்றே சொன்னார்கள்.சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், கேன்சர், பக்கவாதம் இவற்றை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், என்.ஐ.சி.யூ., என்பதையும் பிரபலப்படுத்த வேண்டும். காரணம், இது குறிப்பிடத்தக்க பொது சுகாதாரப் பிரச்னை. இதில் கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்கால தலைமுறையினரின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.இதற்காக, பலவிதமான முயற்சிகளை 20 ஆண்டுகளாகவே எடுத்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக, உலகம் முழுதும் நவம்பர் 17, உலக குறைப்பிரசவக் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில், பிரபலங்கள், குறைப்பிரசவக் குழந்தைகள், அவர்களின் பெற்றோர் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். ஆதரவு குழுக்களை துவக்குகிறோம். குறைப் பிரசவம் பற்றி பேசுவது, படிப்பது அபசகுணம் என்று நினைக்காமல், என்.ஐ.சி.யூ., பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் என்.ஐ.சி.யூ.,விற்கு குழந்தையை அனுமதிக்க வேண்டும். சமீப ஆண்டுகளில் வெளியான கருத்துக் கணிப்புகளில், அடுத்த சில ஆண்டுகளில், தற்போது சர்க்கரை கோளாறு, கேன்சர் போன்ற தொற்றா நோய்களின் தலைநகரமாக நம் நாடு இருப்பதைப் போன்று, குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு அவர்களின் 40 வயதில் வரக் கூடிய உடல் கோளாறுகளின் தலைநகரமாக மாறும் என்று கூறுகிறது.டாக்டர் தீபா ஹரிஹரன், பச்சிளங் குழந்தைகள் சிறப்பு மருத்துவர், சூர்யா மருத்துவமனை, சென்னை 044 2376 1750