உள்ளூர் செய்திகள்

ஒளிமயமான எதிர்காலம்!

டிச.,12 திருக்கார்த்திகைஉலகம் தோன்றிய காலத்திலேயே, நெருப்பின் முக்கியத்துவத்தை புரிந்து வைத்திருந்தான், மனிதன். இருளுக்கு பயந்து, வெளிச்சத்துக்காக, நெருப்பு மூட்டினான்; அவ்வெப்பத்தை கண்டு, விலங்குகள் அஞ்சி ஓடின. அதனால், நெருப்பை தன் பாதுகாப்பு அரணாக மாற்றி கொண்டதுடன், அதை தெய்வமாகவும் வணங்க ஆரம்பித்தான். நெருப்புக்கான மாதம், கார்த்திகை; இம்மாதத்தில், கார்த்திகை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும், கார்த்திகை விளக்கு வழிபாடு, தொன்று தொட்டு இருந்து வருகிறது.சென்னை மயிலாப்பூரில், தனக்கு நிச்சயம் செய்த, பூம்பாவை என்ற பெண், திடீரென மரணமடையவே, வீடுகளில் விளக்கேற்றுவது பற்றி குறிப்பிட்டு,'விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்...' என்று வருத்தப்பட்டு பாடினார், ஞானசம்பந்தர்.இதிலிருந்து இவ்விழாவின் மேன்மையை, அறிந்து கொள்ளலாம்.நெருப்பை, அக்னி என்றும் கூறுவர். அக்னி சொரூபமாக, சிவனின் நெற்றிக்கண் அமைந்துள்ளது. அதில் எழுந்த ஞானஜோதியில் பிறந்தவர், முருகன். இதனால், கார்த்திகை திருநாள், முருகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆயிற்று.மாதந்தோறும், கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமே மக்களால் விழாவாக கொண்டாடப்படுகிறது.அத்துடன், ஜோதி வடிவாகிய சிவன், கருணையோடு நமக்கு அருள் புரியும் நாள் தான், திருக்கார்த்திகை.இந்நாளில், கார்த்திகைப் பொரியை இறைவனுக்கு படைப்பது மரபு. வெல்லம் சேர்த்த பொரி உருண்டையோடு, அப்பம், பாயசம், பிடி கொழுக்கட்டை ஆகியவையும், பிரசாதத்தில் இடம்பெறும்.திருக்கார்த்திகை நாளில், பிரதான திருவிளக்கோடு, இருபுறமும் துணை விளக்குகளையும் ஏற்ற வேண்டும். குறைந்தபட்சம், ஆறு விளக்குகள் ஏற்ற வேண்டும் என்பது விதி.பொதுவாகவே, சூரியோதயத்திற்கு முன், பிரம்ம முகூர்த்த வேளையான, காலை, 4:30லிருந்து 6:00 மணிக்குள் விளக்கேற்றினால், பெரும் புண்ணியம் கிடைப்பதுடன், முன்வினை பாவம் விலகும். வழக்கமாக மாலை, 6:00 மணிக்கு விளக்கேற்றும் பழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால், மாலை, 4:30 - 6:00 மணிக்கு, இடையே உள்ள பிரதோஷ வேளையில், சிவபெருமானையும், நரசிம்ம மூர்த்தியையும் மனதில் நினைத்து விளக்கேற்றினால், வாழ்க்கை பிரகாசமாக அமையும். மாலையில் தீபமேற்றினால், திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம்.திருக்கார்த்திகை திருநாள், நமக்கு ஒளிமயமான எதிர்காலத்தை தர, சிவனையும், முருகனையும் வேண்டுவோம்!தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !