உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

ஆர். மனோகர், திருச்சி: இடது கம்யூனிஸ்ட், டி.ராஜா, மீண்டும் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரே...
கேரளாவைத் தவிர, இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் இல்லையே... தமிழகத்திலும் அப்படித்தான். அதனால், மீண்டும், பொதுச் செயலராக வந்துள்ளார்!
மகேஷ், கன்னியாகுமரி: பெரும்பாலான லாரி டிரைவர்கள், தாடி, மீசை வைத்துள்ளனரே... இதற்கு என்ன காரணம்?
தொடர் வேலை காரணமாக, 'சலுானுக்கு' போக முடியாமல் தவிக்கின்றனர். அதனால் தான், தாடியும், மீசையும்!
* கு. மகேஷ், நெல்லை: குறையில்லாத நண்பர் ஒருவரை தேடுகிறேன்... எனக்கு கிடைப்பாரா?
கிடைக்கவே மாட்டார்... அப்படிப்பட்டவர்களைத் தேடினால், நீங்கள் நண்பர்களே இல்லாதவர் ஆவீர்கள்!
லலிதா அசோக், நாகப்பட்டினம்: வாழ்வில் வெற்றி பெற உதவுவது பட்டறிவா, படிப்பறிவா?
இரண்டாவது ஓரளவுக்கு உதவும்; முதலாவது ரொம்ப முக்கியம். ஏற்கனவே பட்டறிவு பெற்றவர்களிடம் அதைப் பெற்றுக் கொள்வது லாபகரமானது!
என். மாரியப்பன், கன்னியாகுமரி: 'சான்றோர்' எனச் சொல்கின்றனரே... அவர் யார்?
தக்க நேரத்தில் உதவி, துன்பம் போக்கியவரின் நட்பை, ஏழு பிறப்பிலும் நினைத்து போற்றுவோர் தான் சான்றோர்கள்!
சி. வசந்தன், கோவை: அறம் செய்ய வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறானே, என் நண்பன்!
நல்லது தானே! அறம் செய்வதை தள்ளிப் போடக் கூடாது... உடனுக்குடன் செய்ய வேண்டும்! நம் உடல் அழியும் காலத்தில், துணையாக நம்முடன் வருவது, அறம் மட்டுமே!
ஜெ.ஸ்ரீதர், காஞ்சிபுரம்: வன்முறையில் ஈடுபடும் கட்சிகளை அரசியலில் இருந்து நீக்கினால் என்ன?
அப்புறம் எந்தக் கட்சி தான் மிஞ்சும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !