அந்துமணி பா.கே.ப.,
பாடுபட்டு உழைப்பவர்களை, வியந்து பாராட்டுகிறேன். துடுப்புப் போடாமல் படகிலே உட்கார்ந்து பயணம் செய்வோரை, எனக்குப் பிடிக்காது. உள்ளதற்கும் குறைவாக வேலை செய்வதைக் காட்டிலும், உள்ளதற்கும் அதிகப்படியாக வேலை செய்வதுதான் உற்சாகம். அதிகமாக உழைக்க உழைக்க வேலையாட்களின் எண்ணிக்கை குறையும்; எனவே, லாபம் அதிகமாக இருக்கும். அதிகமாக லாபம் கிடைத்தால், அனைவரும் அதிகமாக பகிர்ந்து கொள்ளலாம்.* முதல்தர மூளை உள்ளவர்களை போற்றுகிறேன்; மூளையில்லாதவர்களைக் கொண்டு, ஒரு பெரிய நிறுவனத்தை நடத்த முடியாது. ஆனால், வெறும் மூளை மட்டும் போதாது; அறிவிலே நேர்மையும் இணைய வேண்டும்.* உறவுக்காரர்களை வேலைக்கு அமர்த்துவது எனக்குப் பிடிக்காது; அதில், வீண் வம்புகள் பெருகும்.* மேலதிகாரியை காக்காய்ப் பிடிக்கிறவர் களை வெறுக்கிறேன்; ஏனெனில், இந்தப் பேர்வழிகள், தங்களின் கீழே வேலை செய்வோரை சதா கொத்திப் பிடுங்கிக் கொண்டு இருப்பர்.* தனக்குப் பின், பதவியை ஏற்கக் கூடிய தகுதியுள்ளவர்களாக கீழே உள்ளவர்களை உருவாக்குகிறவர்களை போற்றுகிறேன். மட்டமானவர்களை தன் கீழே அமர்த்திக் கொண்டால் தான், தாங்கள் பத்திரமாக இருக்க முடியும் என்று நினைக்கும் நபர்களை கண்டு பரிதாபப்படுகிறேன்.* மற்றவர்களையும் மனிதனாகக் கருதி, மென்மையாக நடந்து கொள்கிறவர்களை போற்றுகிறேன்; சண்டைக்காரப் பேர்வழிகளை வெறுத்து ஒதுக்குகிறேன். சமாதானமாக வாழ்வதற்குச் சிறந்த வழி, ஒளிவு, மறைவு இல்லாமல் இருப்பது தான். ப்ளேக் சொன்னார்... 'நான் என் நண்பனிடம் சினம் கொண்டேன்; அவனிடம் என் கோபத்தைக் கூறினேன்; சினம் ஒழிந்தது. நான், என் பகைவனிடம் சினம் கொண்டேன். அதைப் பற்றிக் கூறவில்லை; சினம் வளர்ந்தது...'— அமெரிக்க கோடீஸ்வரரான டேவிட் ஒகில்வியின் சுயசரிதை யை சமீபத்தில் படித்தேன்; அதிலிருந்து சில துளிகள் தான் மேலே உள்ளவை.'ஜாலியா ஒரு, 'ரைடு' போய் வரலாமா?' என, கடந்த வாரத்தில் நண்பகல் நேரத்தில் கேட்டார் லென்ஸ் மாமா.அன்று, அவ்வளவாக வேலையும் இல்லை; பொ.ஆ., 'அவுட் ஆப் ஸ்டேஷன்' வேறு! 'ஓ... எஸ்...' என்றபடி நான் கிளம்பி படிகளில் இறங்க, உஸ்... புஸ்... என மூச்சு விட்டபடி, துண்டால் தன் நெற்றியையும், தலையையும் துடைத்துக் கொண்டே, மாடிப்படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தார், நடுத்தெரு நாராயணன்.'ஓய்... நீரும் வர்றீரா?' என லென்ஸ் மாமா வினவ, 'எங்கே... எதற்கு?' எனக் கூட கேட்காமல், 'கொஞ்சம் இரும்... மேட்டரைக் குடுத்திட்டு வந்துடறேன்...' எனக் கூறி, இரண்டு இரண்டு படியாக, சின்னப் பையன் போலத் தாவித் தாவி ஏறினார். உஸ்... புஸ்... போன இடம் தெரியவில்லை. மாமாவுடன் அல்லவா வெளியே போகிறார்... உற்சாகம் பிய்த்துக் கொண்டது அவருக்கு!மூவரும் கிளம்பி, தேனாம்பேட்டை சிக்னலை அணுகும் போது, அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் பெரியவர் ஒருவரைக் கண்டதும், 'அடடா... இந்த மனுஷன் இங்கே... எங்கே?' என்றபடி வண்டியை ஓரங்கட்டினார் மாமா.அடையாளம் கண்டு கொண்ட பெரியவரும் ஓடி வந்து, வண்டியில் தொற்றிக் கொண்டார். அந்தப் பெரியவர், அரசின் கல்வி இலாக்காவில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர் என்பதை லென்ஸ் மாமா கூற, அறிந்து கொண்டேன்.வண்டி, செங்கல்பட்டை நோக்கி வேகம் எடுத்தது.'மாமா பசிக்குது... காலையிலேயும் எதுவும் சாப்பிடலை...' என்றேன். 'கொஞ்சம், 'வெயிட்' பண்ணு... இங்கே உள்ள கல்லூரி வளாகத்தில், மெயின் ரோடில் ஒரு ஓட்டல் புதுசா திறந்து இருக்காங்க... அங்க சாப்பிடலாம்...' என்றார்.அந்த ஓட்டலும் வந்தது. உள்ளே நுழைந்த நால்வரும், அவரவர் தேவையை ஆர்டர் செய்த பின், பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தேன்...'புதிது புதிதாக காளான்கள் போல, பல பொறியியல் கல்லூரிகளும், பாலிடெக்னிக்கு களும் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் முளைத்து வருகிறதே... அவற்றின் தரம் எப்படி இருக்கிறது? இந்தக் கல்லூரிகளின் தேவைக்கேற்ப, 'டீச்சிங் ஸ்டாப்' கிடைக்கின்றனரா, இருக்காங்களா?' எனக் கேட்டேன்.மனிதர் பேச ஆரம்பித்தால், நமக்கு ஜாமின் கொடுக்க நாலு பேர் வந்தாலும் முடியாது என்பதை, அப்போது தான் புரிந்து கொண்டேன். நிறுத்தாமல் அவர் கூறியது இது தான்:தம்பி... கல்வி இப்போ நல்ல வியாபாரமா ஆயிடுச்சு; குறுகிய காலத்திலே, நல்ல பணம் பார்க்க முடியுது. கோர்சுக்கு ஏத்த மாதிரி, மாணவர்கள்ட்ட 50 ஆயிரத்திலிருந்து, 5 லட்சம் ரூபாய் வரை நன்கொடை வசூல் செய்றாங்க கல்லூரிகளை, 'பிரமோட்' பண்றவங்க. இதுவே, மெடிக்கல் சீட்டுன்னா, ௫௦ முதல் ௭௫ லட்சம் ரூபாய் வரை கூட நன்கொடை வசூல் செய்றாங்க.ஆனால், விரல் விட்டு எண்ணக் கூடிய சில தனியார் கல்லூரிகளில் மட்டுமே தரமான கல்வி, இதமான சூழ்நிலைகள் உள்ளன. மற்றவை அனைத்தும், ஓலைக் கூரைகளிலும், ஓட்டுக் கட்டடங்களிலும், முறையான பயிற்சி பெறாத, அனுபவம் இல்லாத ஆசிரியர்களை வைத்து, கல்லூரிகளை நடத்துகின்றனர்; அவர்களின் எண்ணம் எல்லாம் பணத்தின் மீது தான்!பாரு தம்பி... '௮௨, ௮௩' 'அகடமிக் இயர்'ல, ௧௩ இன்ஜினியரிங் காலேஜ் தான் இருந்தது. ௩,௦௦௦ மாணவர்கள் படித்தனர். இப்போ எத்தனை இன்ஜினியரிங் காலேஜ்கள்... '௮௨, ௮௩'ல ௫௯ பாலிடெக்னிகுகள் இருந்தன. அப்போது, இதில், ௮,௫௦௦ மாணவர்கள் தான் படித்தனர். இப்போதோ பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.இதே நிலை தான், டி.பார்ம்., - பி.பார்ம்., - எம்.சி.ஏ., - பி.ஆர்க்., - எம்.பி.ஏ., போன்ற படிப்புகளிலும் உள்ளது.திடுமென இவ்வளவு கல்லூரிகள் அதிகமாகி விட்டதால், ஒவ்வொரு ஆண்டும் ஏகப்பட்ட பட்டதாரிகள், தரமில்லாத கல்வி நிலையங்களில் இருந்து வெளி வருகின்றனர். இத்தகைய கல்வி நிலையங்களில் இருந்து வெளிவரும் இவர்களை நம்பி வேலை கொடுக்கவும் தனியார் நிறுவனங்கள் அஞ்சுகின்றன. வேலைவாய்ப்புத் தேவைக்கு அதிகமாக, பட்டதாரிகள் உருவாகி வரும் நிலை ரொம்ப ஆபத்தானது, எனக் கூறி எங்களைப் பார்த்தார்.'யாவ்' என ஏப்பம் விட்டபடியே, 'பிங்கர் பவுலில்' கையை கழுவிக் கொண்டார் லென்ஸ் மாமா!