அந்துமணி பா.கே.ப.,
பா - கே - பஅலுவலக மதிய உணவு இடைவேளைக்கு பின், சற்று, 'ரிலாக்ஸ்' செய்ய அலுவலகத்தில் உள்ளோர், பேப்பர், புத்தகம் படிப்பது என்று சிறிது நேரம் செலவழிப்பர்.அப்படி, உதவி ஆசிரியை ஒருவர், 'வினோதமான விவாகரத்து வழக்குகள்' என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த லென்ஸ் மாமா, 'ஐயையோ... ஏம்மா... ஏதாவது விபரீதமா முடிவு எடுத்துடாதே... என்ன பிரச்னை என்று சொல். நான் தீர்த்து வைக்கிறேன்...' என்று, இவராக எதையோ கற்பனை செய்து சொல்ல, அலறினார், உதவி ஆசிரியை.'அடச்சே... மாமா, உமக்கு ஏன் இப்படி புத்தி போகுது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் வெளிநாடுகளில் தான் விவாகரத்து பெறுவர். இந்தியாவிலும் அப்படி சில வழக்குகள் நடந்திருப்பதாக, இந்த புத்தகத்தில் போட்டிருக்காங்க. நம்ம நுாலகத்தில் இருந்ததை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். வில்லங்கமா எடுத்துட்டீரே...' என்று கடுப்பாக பதிலளித்தார், உதவி ஆசிரியை.எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார், மாமா.'லென்ஸ் மாமாவோடு ரொம்ப வெச்சுக்காதே...' என்று என்னை எச்சரித்து, அந்த புத்தகத்தை, மேஜை மீது துாக்கியெறிந்தார்.நான் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அதில்:திருமண முறிவை ஏற்படுத்தும், விவாகரத்து, வாழ்க்கையில் சந்திக்கக் கூடாத ஒரு நிலை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விவாகரத்து பெறுவதற்கு, வன்முறை மற்றும் கொடுமை மட்டுமே காரணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. சில சமயம், சில சிறிய காரணங்கள் கூட விவாகரத்து பெற காரணமாக அமைந்து விடுகிறது.இந்த காரணங்கள் வினோதமானவையாக கூட இருக்கலாம். உண்மையிலேயே விசித்திரமான காரணங்களின் அடிப்படையில், மக்கள் விவாகரத்து கோரிய, இந்தியாவின் வினோதமான விவாகரத்து வழக்குகள் சில:* அதிகமாக, 'பார்ட்டி'களுக்கு சென்றதால் விவாகரத்து: மாலுமி ஒருவர், தன் மனைவி அதிகமாக, 'பார்ட்டி'களுக்கு செல்வதாகவும், சீரற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், இதனால், தன் மன அமைதி குலைவதாகவும் கூறி, வழக்கு தொடர்ந்து, விவாகரத்தும் பெற்றார்* அதீத உடலுறவால் விவாகரத்து: படுக்கையறை பிரச்னைகளால் விவாகரத்து கோருவது, இந்தியாவில் சாதாரணமானது. ஆனால், இந்த வழக்கு சற்று வித்தியாசமானது. மும்பையை சேர்ந்த ஒருவர், தன் மனைவியை, 'செக்ஸ் மிஷின்' என்று கூறி, விவாகரத்து கோரினார்.'அந்த' விஷயத்தில், அவரது மனைவிக்கு, தீராத பசி. உடல்நிலை சரியில்லாதபோது கூட, உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதாக, மனைவி மீது குற்றம் சாட்டினார். மேலும், தன் கோரிக்கைகளுக்கு அடிபணியவில்லை என்றால், மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்வதாக மிரட்டியதாகவும் கூறினார். அவரின் பரிதாப நிலையை கண்ட நீதிமன்றம், அவருக்கு, விவாகரத்து வழங்கியது* கணவரின் காலில் விழாமல் இருக்க... வட மாநிலங்களில், 'கர்வா சவுத்' என்பது, மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் விழா. அப்போது, பெண்கள், தங்கள் கணவரின் காலில் விழுந்து, ஆசிர்வாதம் வாங்க வேண்டும். ஆனால், இந்த மனைவி, கணவரின் காலில் விழுவதை விட, விவாகரத்து மேல் என்று எண்ணினார். இதையே காரணம் காட்டி, வழக்கும் தொடர்ந்தார்.அவர்கள், 'தனித்தனி வழிகளில் செல்வது நல்லது...' என்று, முடிவு செய்தது, நீதிமன்றமும் விவாகரத்து வழங்கியது* பருக்கள் இருந்ததால்... மனைவியின் முகத்தில் அதிக பருக்கள் இருந்ததால், அதிர்ச்சியடைந்த கணவர், அதை காரணமாக கூறி, விவாகரத்து வாங்கினார் * அம்மாவை போல சமைக்காததால்... அம்மா சமைக்கும் உணவு தான், உலகிலேயே சுவையான உணவு என்பது, பல ஆண்களின் எண்ணம். தன் அம்மா சமைத்த இறைச்சியை ருசித்து சாப்பிட்டு பழகியவர், தன் மனைவி, அதை குக்கரில் சமைத்தபோது வெறுத்தார். இறுதியில் அவர், நீதிமன்றத்தை அணுகி, மனைவியை விவாகரத்து செய்தார்* கணவரின் வீடு சிறியதாக இருந்ததால்... வசதியான வாழ்க்கையை பெண்கள் விரும்புகின்றனர் என்பதற்கு, இது ஒரு உதாரணம். ஒரு பெண், திருமணத்திற்கு முன், தான் வாழ்ந்த வீட்டை விட, கணவரின் வீடு சிறியதாக இருந்ததால், விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடி, விவாகரத்து பெற்றார்* மனைவியின் உடை பிடிக்காததால்... தன் மனைவி, பேன்ட் - ஷர்ட் அணிந்து அலுவலகத்திற்கு செல்வதை விரும்பாத, கணவர், விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவரது மனுவை, மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.* கணவர் சொந்த மொழியில் பேசியதால்... வட மாநிலத்தை சேர்ந்த ஆணும், தென் மாநிலத்தை சேர்ந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவர், தன் சொந்த மொழியில் மருத்துவர் மற்றும் ஆடிட்டருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எரிச்சலடைந்தார், மனைவி. அவர்கள் பேசிய எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை அவரால். எனவே, அவர், டாக்டரையும், ஆடிட்டரையும் மாற்ற நினைத்தார். இதற்கு கணவர் ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் இந்த வழக்கு, விவாகரத்தில் முடிந்தது* நண்பர்களுக்கு, மனைவி, டீ போடாததால்... கடந்த,1985ல், கணவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டது. ஏனெனில், அவரது மனைவி, தன் நண்பர்களுக்கு தேநீர் தயாரிக்க மறுத்து விட்டார் என்றும், அது, தனக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் முறையிட்டார், கணவர். மேலும், தன்னிடம் கூறாமல், கருவை கலைத்ததாகவும் அவர் முறையிட்டு, விவாகரத்து பெற்றார்.- படித்து முடித்ததும், இந்தியா ரொம்பவே முன்னேறிடுச்சு என்று நினைத்து, அப்புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்தேன்.பகண்காட்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. பெரியவர்களுக்கு, ஐந்து ரூபாயாகவும், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு, மூன்று ரூபாயாகவும் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தன் மகனுடன் ஒருவர், கண்காட்சி பார்க்க வந்தார். அவர் மகன் ஒல்லியாக, பார்க்க மிகச் சிறியவனாக தெரிந்தான். 'பெரியவங்க டிக்கெட் இரண்டு கொடுங்க...' என்று, 10 ரூபாயை நீட்டினார்.'பையனுக்கு, 10 வயசாடுச்சா... பார்த்தா சின்னப் பையனா இருக்கிறானே...' என்றார், நுழைவுச் சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தவர்.'பார்ப்பதற்கு தான் அப்படி தெரிகிறான். ஆனால், 10 வயதாகி விட்டது...' என்றார், அப்பா.'நீங்கள் சொல்லாவிட்டால் எனக்கு தெரிந்திருக்காது. மூன்று ரூபாய் டிக்கெட்டிலேயே அவனை உள்ளே அழைத்துச் சென்றிருக்கலாம்...' என்றார்.'உங்களுக்கு தெரிந்திருக்காது. ஆனால், என் மகனுக்கு, நான் இரண்டு ரூபாய்க்காக பொய் சொல்கிறேன் என்று தெரியும். இந்த இரண்டு ரூபாய் பொய், அவனை வேறு வழியில் திருப்பி விடும்...' என்றார், அப்பா.எனவே, அப்பாவின் தலையாய கடமை, தன் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருப்பது தான்.- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.