உள்ளூர் செய்திகள்

பிறவியின் பயன்!

இயற்கையாகவே நற்குணங்கள் உள்ளவர், பெண்கள். எந்தவொரு பெரிய மனிதரின் வரலாற்றிலும், ஒரு பெண், தூண்டுகோலாகவோ அல்லது தங்கள் நற்செயல்களின் மூலமோ, அப்பெரியவர்களின் மனதில் உயர்வான இடத்தை பெற்றிருப்பர். அதுபோன்றதொரு நிகழ்வு, புத்தரின் வாழ்விலும் நடந்துள்ளது.பாகீரதி நதிக்கரையிலிருந்த ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்தர் ஒருவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர், சுஜாதை. மணமாகி பல ஆண்டுகள் கடந்தும், இவர்களுக்கு குழந்தை இல்லை. நல்லொழுக்கமும், இரக்க மனமும், அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காத குணமும் கொண்டவள், சுஜாதை.இவள், தனக்கு புத்திரன் பிறந்தால், காட்டில் உள்ள வன தேவதைக்கு அன்னம் படைப்பதாக, பிரார்த்தனை செய்து கொண்டாள்; அவ்வேண்டுதலின் படி, அடுத்த ஆண்டே சுஜாதைக்கு ஆண் குழந்தை பிறந்தது.வேண்டுதலை நிறைவேற்ற, தன் தோழியுடன், குழந்தையை தூக்கியபடி காட்டிற்கு போனாள், சுஜாதை.வனத்தில், ஒரு அரச மரத்தடியில் தியானத்தில் அமர்ந்திருந்தார், புத்தர். அவரை வனதேவதை என நினைத்த சுஜாதை, தான் கொண்டு போயிருந்த விதவிதமான உணவுப் பொருட்களை அவருக்கு படைத்தாள்.ஆள் அரவமற்ற அந்த வனப் பகுதியில், அன்போடு அவள் படைத்த உணவுப் பண்டங்களை உண்ட புத்தர், 'அம்மா... நான் வன தேவதையல்ல; சாதாரண, எளிய மனிதன். நல்வழியை நாடி, இக்காட்டில் அலைந்து, திரிகிறேன். தங்களுக்கு ஏதாவது அதுகுறித்த நீதி தெரிந்தால் கூறுங்கள்...' என்றார்.'ஐயா... நானோ அதிகம் படித்திராத பெண்; அத்துடன், சாஸ்திர நூல்களையோ, அந்நூல்களை கற்றுணர்ந்த பெரியவர்களுடனோ நெருங்கி பழகியவளும் அல்ல.'எனக்கு தெரிந்தது எல்லாம் என்னுடைய ஒழுக்கமும், நன்மை செய்தால், நன்மையும், தீமை செய்தால், தீமையும். நம்முடைய நன்மை, தீமைகளை நாம் தான் அனுபவித்தாக வேண்டும் என்பது தான். இவை தவிர எனக்கு வேறொன்றும் தெரியாது. அதனால், என் மனசாட்சிக்கு மாறுபடாமல், இதுவரையில் நன்மைகளையே செய்து வந்துள்ளேன்.'அந்த நன்மை, இந்தப் பிறவியில் எனக்கு பலன் தராவிட்டாலும், மற்றொரு பிறவியிலாவது மனக் களிப்பை தரும். நான், என் குழந்தையை பார்ப்பது போலவே, எல்லா உயிர்களையும், அன்போடு பார்க்கிறேன். இதனால், தெய்வத்தின் பார்வையும், என்னிடம் அன்புள்ளதாக தான் இருக்கும். எனக்கு கிடைக்கும் சுக, துக்கங்கள் எல்லாம், தெய்வத்தால் எனக்கு அளிக்கப்பட்ட என் வினை பயன்களே தவிர, வேறு இல்லை. 'அதன் காரணமாக, நான் மரணத்திற்கு பயப்படுவதும் கிடையாது. எது நடந்தாலும், அது எனக்கு இன்பம் தான். உலகில் இருக்கும் வரை, அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யாமல், நாள்தோறும் நன்மைகளையே செய்ய விரும்புகிறேன். என் பேச்சை கேட்டு, தங்களை போன்றவர்கள் என்ன நினைப்பீர்களோ...' என்றாள் சுஜாதை அமைதியாக!அவள் வார்த்தைகளை கேட்ட புத்தர், 'தாயே... சுகத்தை கண்டறியும் வழி, தங்களுக்கு சொந்தமாகிவிட்டது. பிறவியின் பயனே, அடுத்தவர்களுக்கு உதவி செய்வது தான். அதுவே, எல்லா காலங்களிலும், தவறாமல் நமக்கு நன்மை தருபவை...' என்றார்.புத்தரால் பாராட்டப்பட்ட அப்பெண், ஞான நூல்களை கற்றவளல்ல; ஆனால், நற்செயல்களை மட்டுமே செய்தவள். அப்பெண்ணின் வார்த்தைகள், நமக்கும் வழி காட்டி! பி.என்.பரசுராமன்திருவாசகம்!உகந்தானே அன்புடை அடிமைக்குஉருகா உள்ளத்து உணர்விலியேன்சகந்தான் அறிய முறையிட்டால்தக்கவாறு அன்று என்னாரோமகந்தான் செய்து வழிவந்தார் வாழவாழ்ந்தாய் அடியேற்கு உன்முகந்தான் தாராவிடின் முடிவேன்பொன்னம்பலத்து எம்முழுமுதலே!விளக்கம்: பொற்சபையில் ஆடுகிற எங்கள் முழுமுதல் பொருளே... அன்போடு கூடிய அடிமை தொண்டை விரும்பி ஏற்றுக் கொண்டவனே... அன்பினால் உருகாத மனம் உடைய அறிவிலியாகிய நான், உலகம் அறியும்படிக் கூவி முறையிட்டால், அது முறையல்ல என்று சொல்ல மாட்டார்களா... யாகம் செய்து நல்வழி நிற்பவர்கள் வாழும்படியாக எழுந்தருளியிருப்பவனே... அடியேனுக்கு உன் திருமுகத்தை காட்டாவிடில், நான் வாழ்ந்து என்ன பலன்!கருத்து: அறியாமை நிறைந்த எனக்கும், அருள் செய்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !